நியாபகம் இருக்கா? புதிய அவதாரம் எடுக்கும் டெலிபோன் பூத்கள்... என்னவாக மாறப்போகின்றன தெரியுமா?
செல்போன்களின் வருகையால் நினைவு சின்னங்களாக மாறியுள்ள டெலிபோன் பூத்கள் வெகு விரைவில் புதிய அவதாரம் எடுக்கவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் நகர சாலைகளின் இரு பக்கங்களிலும் பொது டெலிபோன் பூத்கள் நிரம்பி வழியும். தொலைதொடர்புக்கான முக்கிய ஆதரமாக அவை இருந்தன. ஆனால் கையடக்க செல்போன்களின் வருகையால், டெலிபோன் பூத்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. எனினும் உலகின் ஒரு சில நாடுகளில், டெலிபோன் பூத்கள் நினைவு சின்னங்களாக இன்னமும் உள்ளன.

இதில், அயர்லாந்தும் ஒன்று. இந்த நாட்டில் டெலிபோன் பூத்களுக்கு புதிய அவதாரம் கொடுக்க இரண்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. காலத்துக்கு ஏற்ற மாற்றமாக, டெலிபோன் பூத்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்ற அவை முடிவு செய்துள்ளன. இன்று அனைவரின் பாக்கெட்டிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன.

எனவே டெலிபோன் பூத்களை பயன்படுத்துவதற்கு யாரும் இல்லை. எனவே அயர்லாந்தில் டெலிபோன் பூத்கள் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களாக புதிய அவதாரம் எடுக்கவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள், இங்கு அவற்றின் பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

கார் சார்ஜிங் சேவைகளை வழங்கி வரும் ஈஸிகோ (EasyGo) மற்றும் டெலிகாம் நிறுவனமான ஈஐஆர் (Eir) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. 180 டெலிபோன் பூத்களை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்றுவதற்காக இந்த 2 நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று கூட்டணி அமைத்துள்ளன.

இது எளிமையான திட்டம் என்றாலும், தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில்தான் பொது டெலிபோன் பூத்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்றினால், எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டெலிபோன் பூத்களின் அமைவிடம் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

கிராமப்புற பகுதிகளிலும் கூட தற்போது டெலிபோன் பூத்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. எனவே அந்த பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள், ரேஞ்ச் பற்றியோ அல்லது பேட்டரியை ரீசார்ஜ் செய்வது பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கும் இந்த திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று மாசுபாடு பிரச்னை மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இதில், அயர்லாந்தும் ஒன்று. வரும் 2030ம் ஆண்டுக்குள் 1 மில்லியன் (10 லட்சம்) எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் இயங்க வேண்டும் என அயர்லாந்து விரும்புகிறது.

ஆனால் உலகின் மற்ற நாடுகளை போலவே, சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை மற்றும் ரேஞ்ச் பற்றிய அச்சத்தால், அயர்லாந்திலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஒரு சிலர் தயங்குகின்றனர். ஆனால் டெலிபோன் பூத்களை சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்றுவது போன்ற திட்டங்கள் மூலம் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








