ரூ20 லட்சத்துக்கு கார் வாங்குனா ரூ9 லட்சம் வரி கட்டனுமா? இவ்வளவு பணம் வரியா மட்டும் போகுதா?
ரூபாய் 20 லட்சத்திற்கு கார் வாங்கினால் அதில் ரூபாய் 9 லட்சம் அரசுக்கு வரியாக மட்டுமே செல்வதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவு ஒன்று பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு அதிக அளவில் வரி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு செய்யப்பட்டு இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பேஸ்புக்கில் சென் பாலன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்த பதிவின்படி மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரின் விலை குறித்த விபரங்களை வெளியிட்டு இருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த பதிவின்படி ரூபாய் 20 லட்சத்திற்கு கார் வாங்கினால் அதில் ரூபாய் 9 லட்சம் அரசுக்கு வரியாக மட்டுமே செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவின்படி மஹிந்திரா தார் காரின் அடிப்படை விலையாக ரூபாய் 11.65 லட்சம் அதற்கு மாநில ஜிஎஸ்டி வரியாக 14 சதவீதம் ரூபாய் 1.63 லட்சமும், மத்திய ஜிஎஸ்டி வரியாக 14 சதவீதம் ரூபாய் 1.63 லட்சமும், இதற்கு செஸ் வழியாக 20 சதவீதம் அது ரூபாய் 2.33 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.
இதுபோக வருமான வரியாக ஒரு சதவீத வரி ரூபாய் 17,240, சாலை வழியாக ரூபாய் 2.19 லட்சம், இன்சூரன்ஸ் வகைக்காக ரூபாய் 1 லட்சமும் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக ரூபாய் 20.60 லட்சம் கொடுத்து தான் இந்த காரை வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இவ்வளவு பணம் கொடுத்து இந்த காரை வாங்கும்போது இதில் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு வெறும் ரூ11.60 லட்சம் மட்டுமே பணம் செல்வதாகவும், பாக்கி ரூ9 லட்சத்தில் ரூ1 லட்சம் இன்சூரன்ஸ் போக மற்ற அனைத்து பணமும் வரியாக மட்டுமே அரசுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த பதிவில் அவர் இந்த காரை வாங்குவதற்காக சம்பாதித்த ரூ20 லட்சம் பணத்திற்கு தனியாக வருமான வரி செலுத்த வேண்டியது இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ரூ20 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு வருமான வரி 30 சதவீதம் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் ரூ30 லட்சம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே இந்த ரூ20 லட்ச காரை வாங்க முடியும் என அவர் பதிவு செய்திருந்தார். இதுபோக பெட்ரோல் போடுவதன் மூலம் அரசுக்கு லிட்டருக்கு ரூ50 வரி, டோல்கேட் கட்டணம், கார் சர்வீஸ் செய்வதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்படுவதாக பதிவிட்டிருந்தார்.
இவர் பதிவின்படி ரூ20 லட்சம் காருக்கு 9 லட்சம் வழியாக செலுத்துகிறோமா என்று கேட்டால் அதைப்பற்றி நாம் முதலில் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்லைனில் சோதனை செய்யும் போது காருக்கான விலை குறித்த விபரங்களை பார்த்தால் ஜிஎஸ்டி வரி என்ற விபரம் இருக்காது. அதற்கு பதிலாக எக்ஸ்-ஷோரூம் விலை என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். காரின் விலையுடன் அனைத்து வரிகளும் சேர்த்து தான் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்பாலன்செய்த பதிவில் எந்த வேரியண்டிற்கான விலை விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார் என்ற விபரங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்த கணக்கு துல்லியமாக இருக்கிறதா என்பதை நம்மால் சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட இது சரியாக தான் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வாகனம் வாங்கும் போது எக்ஸ்-ஷோரூம் விலையில் ஜிஎஸ்டி வரி போக கூடுதலாக ஆர்டிஓ பதிவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
அதிக விலை கொண்ட காருக்கு செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இதையெல்லாம் சேர்த்து அரசுக்கு அதிகமாக வரி செலுத்த வேண்டியது இருப்பது உண்மைதான். சொல்லப்போனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வாகனத்தை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிக பணத்தை அரசு வரியாக மட்டும் பெறுகிறது. இதற்குப் பின்னால் மற்றொரு விஷயமும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு இந்த வரி விதிப்பை லாபமாக மட்டும் பெறவில்லை குறிப்பிட்ட காரை விற்பனை செய்வதன் மூலம் அரசு அந்த கார் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். மேலும் அந்த கார் இயங்குவதற்கான கட்டுமான பகுதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே வாகனங்களுக்கு அதிகமான வரி விதிக்கப்படுகிறது.
உதாரணமாக ஒரு கார் செயல்பட வேண்டும் என்றால் தரமான சாலைகள் வேண்டும். அந்த தரமான சாலைகளை அரசுதான் அமைத்து தருகிறது. அதற்கான செலவுகளை இப்படியான வரிகள் மூலம் பெறுகிறது. மற்றொன்று இந்த கார் இயங்கும் போது இது சுற்றுச்சூழலுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டும் சுற்றுச்சூழலை பாதிப்பில்லாத சூழ்நிலையாக மாற்றும் பொறுப்பும் அரசுதான் ஏற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களுக்கு அரசு அதிக அளவில் வரி விதிப்பது உண்மையான ஒரு விஷயம் தான் குறிப்பிட்ட பதிவில் இருக்கும் தகவல்கள் உண்மையா என்பது தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு உண்மைக்கு நிகரான விஷயத்தை தான் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படியாக அதிக வரி வசூல் செய்வது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








