உறவினரின் பேரில் உள்ள வாகனத்தை ஓட்டி செல்லும்போது போலீஸ் மடக்கினால் பிரச்னை வருமா! தெரிஞ்சுக்க வேண்டியது!
நம்மில் பலர் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வாகனங்களை இரவல் கொடுப்பவர்களாகவோ அல்லது அவர்களிடத்தில் இரவல் வாங்குபவர்களாகவே இருக்கின்றோம். இதுபோன்று மற்றவர்களின் பெயரில் உள்ள வாகனத்தை ஓட்டி செல்லும்போது ஏதாவது சிக்கலை நாம் சந்திக்க நேரிடுமா? என்பது பற்றி என்றைக்காவது யோசித்து பார்த்தது உண்டா? குறிப்பாக, காவல்துறையிடம் இருந்து என்ன மாதிரியான சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடும் என்று சிந்தித்து பார்த்திருக்கின்றீர்களா? இதுபற்றி நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான் வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
நம்மில் பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர் அல்லது பிறரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம். இதுபோன்ற வாகனங்களைப் பயன்படுத்தும்போது போலீஸிடத்தில் சிக்கினால் என்னமாதிரியான சவால்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சிக்கல்களைச் சந்தித்தவர்களின் வாயிலாக கிடைத்த தகவல் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால், தாராளமாக நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாகனத்தை நாம் எடுத்துச் செல்லலாம்.

ஆனால், அவர்களின் அனுமதியுடன் மட்டுமே நாம் அந்த வாகனத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நிறுவனங்கள் மற்றும் கார் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட எந்த வாகனங்களையும் ஓட்டி செல்லலாம், எந்த பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக, இந்த மாதிரியான வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது போலீஸின் வாகன தணிக்கைக்கு ஆளாகினால், உரிய ஆவணத்தைக் காண்பிப்பது அவசியமாகும்.
அப்போதே அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிப்பார்கள். உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் வாகனம் உங்கள் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் எனில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆதாரங்களைக் காண்பித்தாலே போதும் அங்கிருந்து தடையின்றி புறப்பட்டு விடலாம். இதேபோல், நீங்கள் பயன்படுத்தும் வாகனம் உங்களுடைய உறவினருடையதாக இருந்தால் அதற்கான அத்தாட்சியைக் காண்பிக்க வேண்டும்.
சில நேரங்களில், வாகனத்தின் ஆர்சி, இன்சூரன்ஸ் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டச உரிய ஆவணம் இருந்தாலே நீங்கள் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்படுவீர்கள். இதில் சிறிதும் சிக்கல் ஏற்படும் எனில் உரிமையாளரை வந்து வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி அந்த வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்வார்கள். ஆகையால், வாகனத்தின் ஆவணத்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பதே நல்லது.
அதேவேளையில், யூஸ்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கிய வாகனத்தை இன்னும் பெயர் மாற்றம் செய்யாமல் பயன்படுத்தி வந்தால், அது மிகப் பெரிய சிக்கலை வழங்க நேரிடலாம். நீண்ட காலமாக உரிமத்தை மாற்றாமல் இருப்பது கண்டிப்பிற்குரிய செயல் ஆகும். இந்த மாதிரியான நேரங்களில் ஒரிஜினல் ஆர்சி போன்ற ஆவணங்களையே போலீஸார் கேட்பார்கள்.
அதை சமர்பித்தால் மட்டுமே அந்த வாகனம் விடுக்கப்படும். திருடப்படும் வாகனங்கள் போலி ஆவணங்களைக் கொண்டு இயக்கப்படுவதால் இந்த விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடி அதிகமாக இருக்கும். வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, வாகன கொள்ளையர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய யுக்தியைக் கையாள்வதால் திருடுப் போகும் வாகனங்களைக் கண்டறிவதில் மிகப் பெரிய சிக்கல் நேரிடுகின்றது.
இதனால்தான், சில நேரங்களில் வாகன தணிக்கையின்போது கடும் கெடுபிடி காட்டப்படுகின்றது. குறிப்பாக, சில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட யூஸ்டு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். மேலும், அவற்றை ஆண்டுக் கணக்கில் பெயர் மாற்றம் செய்யாமலே அவர்கள் பயன்படுத்துவார்கள். அப்போதுதான், சிக்கலில் சிக்கும்போது அவர்களால் அந்த வாகனத்தை அப்படியே அனாதையாக விட்டுவிட்டு தப்பி செல்ல முடியும்.
எனவேதான் வாகனத்தை யூஸ்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கினால் உடனடியாக அதன் உரிமத்தை மாற்றிவிட வேண்டும். இதேபோல், நண்பர்களின் வாகனங்களைக் கொண்டு சிலர் அண்டை நாடுகளுக்கும் பயணிப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், நீங்கள் அவ்வாறு நாடுகடந்த பயணத்தை மேற்கொள்ளும்போது வாகனத்தின் உரிமையாளரின் அங்கீகார கடிதத்தை கையில் வைத்திருப்பது அவசியம்.
உரிமையாளர் அல்லாத நபர் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றால் அது கடத்தப்பட்ட வாகனமாகவே அந்த ஊரு போலீஸார்கள் கருதுவார்கள். மேலும், அந்த வாகனத்தின் உரிமையாளர் வரும் வரை அதை அவர்கள் சிறைபிடிக்க நேரிடலாம். இந்தமாதிரியான சிக்கலில் சிக்கியவர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேறொருவரின் வாகனத்தை எடுத்துப்போகும் போது மட்டுமல்ல சொந்த வாகனமாக இருந்தாலும், அதை வெளியே எடுத்துச் செல்லும்போதும் அந்த வாகனத்திற்கான உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். இதை செய்ய தவறும்பட்சத்தில் சொந்த வாகனமாகவே இருந்தாலும் சிக்கல்தான் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








