வெடிகுண்டு தாக்குதலுக்காக தானியங்கி கார்களை தயாரிக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு!
மனித வெடிகுண்டுகளுக்கு பதிலாக, வெடிகுண்டுகளை நிரப்பி தாக்குதல் நடத்துவதற்காக, தானியங்கி கார்களை தயாரிக்கும் பணிகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி நிபுணர் மிக்கோ ஹைப்போனன் தெரிவித்திருக்கிறார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பணக்கார தீவிரவாதிகள்
ஈராக் மற்றும் சிரியாவில் குறிப்பிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உலகிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பாக விளங்குகிறது. அங்குள்ள எண்ணெய் வயல்களிலிருந்தும், குவியும் நன்கொடைகள் மூலமாக அந்த அமைப்புக்கு வருவாய் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

சிம்ம சொப்பனம்
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ராணுவ பலத்தில் வலுவான நாடுகளுக்கே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. எளிதாக வீழ்த்த முடியாத அமைப்பாக வலுவாக காலூன்றி இருக்கிறது.

எச்சரிக்கை
இந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தானியங்கி கார் குண்டு தாக்குதலை நடத்தும் வாய்ப்பு இருப்பதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் எச்சரித்து இருந்தன. இதனை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வலுவான ஆதாரம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தற்போது வெடிகுண்டு தாக்குதலுக்காக தானியங்கி கார்களை தயாரித்து வருவதாக இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கை நியூஸ் சேனலுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பயிற்சிகள் குறித்த கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவ் ஒன்றை ஸ்கை நியூஸ் சேனல் பெற்றிருக்கிறது. அதில், வெடிகுண்டு தாக்குதலுக்காக தானியங்கி கார் உருவாக்குவதற்காந தொழில்நுட்பத் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆள் பிடிக்கும் வேலை மிச்சம்
தற்போது ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளில் தற்கொலை படைத் தாக்குதலுக்காக அதிக தொகை கொடுத்து மனித வெடிகுண்டுகளாக மாற ஆள் எடுக்கப்படுகிறது. தானியங்கி கார் குண்டு தயாராகிவிட்டால், இந்த ஆள் பிடிக்கும் வேலை மிச்சம் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கருதுகிறது.

அதிக சேதம்
தற்கொலை படை தீவிரவாதிகளின் உடலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே வெடிகுண்டுகளை கட்டி அனுப்ப முடியும். ஆனால், இந்த தானியங்கி காரில், அதிக அளவு வெடிகுண்டுகளை நிரப்பி, இலக்கை துல்லியமாக அடிக்க முடியும். அத்துடன், அதிக சேதத்தையும் ஏற்படுத்த முடியும்.

தடுப்பதும் கடினம்
மனித வெடிகுண்டுகளை தாக்குதல் நடத்த விடாமல் சுட்டு வீழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த தானியங்கி கார் குண்டுகளை தடுப்பதும், சேதத்தை தவிர்ப்பதும் பாதுகாப்பு துறையினருக்கு சவாலாக இருக்கும்.

ஆன்லைன் தாக்குதல்
தானியங்கி கார்களில் மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாகவே, அந்த குண்டுகள் நிரப்பப்பட்ட கார்களை கட்டுப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

இப்படியும் ஒரு ஆபத்து
தனி நபர்களின் தானியங்கி கார்களை கூட திருடிச் சென்று ரிமோட் கன்ட்ரோல் அல்லது கம்ப்யூட்டர் ஹேக்கிங் முறையில் குண்டு வெடிப்பை சுலபமாக நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக மிக்கோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஆபத்து
அமெரிக்காவுக்கு தானியங்கி கார் குண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ள நாடாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தானியங்கி கார் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தானியங்கி தொழில்நுட்பம்
தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் அதிக அளவில் டொயோட்டா ஹை-லக்ஸ் பிக்கப் டிரக்கை பயன்படுத்துகின்றனர். இந்த பிக்கப் டிரக்கையே தானியங்கி சாஃப்ட்வேருடன் மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இப்போதைக்கு...
தற்போதைய நிலையில், உலகில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மட்டுமே தானியங்கி கார் குண்டு தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டதாகும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், அது மிகவும் அபாயகரமானதாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








