மறுபயன்பாட்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஆயத்தம்!
செயற்கைகோள்களை விண்ணில் இறக்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான மறு பயன்பாட்டு ராக்கெட் ஒன்றை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. ராக்கெட் என்று அழைக்கப்பட்டாலும், இது வடிவமைப்பில் அமெரிக்காவின் விண்வெளி ஓடங்கள் போன்று இருப்பதால், ஸ்பேஸ்பிளேன் என்று அழைக்கப்படுகிறது. இந்த விண்வெளி ஓடம் குறித்த சிறப்புச செய்தியை ஏற்கனவே வழங்கியிருந்தோம்.
இந்த நிலையில், இந்த புதிய விண்வெளி ஓடத்தை பரிசோதித்து பார்ப்பதற்கு இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ள இந்த வாகனம் குறித்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆயத்தம்
விக்ரம் சாரா பாய் விண்வெளி மையத்தில் தொழில்நுட்பப் பணிகள் நிறைவு பெற்று, பெங்களூரிலுள்ள விண்வெளி மையத்திலும் இந்த ராக்கெட்டை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏவுவதற்கு தயாராகி வருகிறது.

சீதோஷ்ண நிலை
சீதோஷ்ண நிலை சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த மாதத்திற்குள் இது விண்ணில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வடிவம்
1.5 டன் எடையுடைய இந்த மாதிரி விண்வெளி ஓடம் 70 கிமீ உயரம் வரை அரை வட்டக் கோள வடிவில் விண்ணில் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும். இதன் உண்மையான ராக்கெட் 25 டன் எடை கொண்டதாக இருக்கும்.

கடலில் தரையிறங்கும்
விண்ணில் செயற்கைகோளை இறக்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த விண்வெளி ஓடத்தை வங்காள விரிகுடா கடலில் உருவகப்படுத்தப்பட்ட ஓடுபாதையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, கடற்கரையிலிருந்து 500 கிமீ தொலைவியில் கடலில் தரையிறக்கப்படும்.

மறுபயன்பாடு
தற்போது இந்த விண்வெளி ஓடம் மிதக்கும் வசதி கொண்டதாக இல்லை. எனவே, நிச்சயம் தரையிறங்கும்போது பாதிப்புகள் ஏற்படும். அதனை மீட்டு வந்து மேற்கொண்டு மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடரும்.

செலவு குறையும்
மறுபயன்பாடு ராக்கெட் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், ராக்கெட்டை ஏவுவதற்கான செலவ 10 மடங்கு குறையும். அதாவது, ஒரு டன்னுக்கு 2,000 டாலர் என்ற அளவில் குறையும். எனவே, இந்த திட்டம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டமாக கருதப்படுகிறது.

உண்மையான விண்வெளி ஓடம்
தற்போது Reusable Launch Vehicle – Technology Demonstrator (RLV-TD) என்று குறிப்பிடப்படும் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் மாதிரிதான் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் உண்மையான பதிப்பை மேம்படுத்தி விண்ணில் செலுத்துவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், ஓடுபாதை உள்ளிட்ட இதற்கான கட்டமைப்பையும் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

மதிப்பு
ரூ.95 கோடி மதிப்பீட்டில் இந்த விண்வெளி ஓடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சோதனை வெற்றிபெற்றால், இது ஒரு பெரிய பொருட்டாக அமையாது.

பெருமை
இந்த விண்வெளி ஓடம் போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட் 100 சதவீதம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சோதனை வெற்றியடைந்தால், உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி நுட்பம் பல படிகள் முன்னே இருக்கும்.


Click it and Unblock the Notifications