வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1.. இந்தியாவிற்கு மட்டுமல்ல மொத்த அரசு பள்ளிகளுக்கும் கிடைத்த வெற்றி
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ-வால் சமீபத்தில் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் விதமாக இந்த விண்கலம் கடந்த ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது சுட்டெரிக்கும் சூரியனை ஆய்வு செய்யும் விதமாக இஸ்ரோ ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருக்கின்றது. இதற்கான கவுன்டவுன் சமீபத்தில் தொடங்கியநிலையில் அதையே தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கின்றது. முந்தைய சந்திரயான் 3 மூன்று விண்கலத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் ஓர் தமிழர் இருந்தததைப் போலவே இந்த விண்கலத்திற்கு பின்னாலும் ஓர் தமிழரே இருக்கின்றார்.

சந்திரயான் 3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல் என்கிற தமிழர் பணியாற்றி இருந்தார். இவரின் தலைமையிலேயே சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டு வெற்றிகரமாக சந்திரனில் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தமிழகத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர்ஷாஜி தலைமையில் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் விதமாக விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
இவர் தமிழகத்தின் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஆவார். இதனால்தான் இவருக்கு கிடைத்த வெற்றியை ஒட்டுமொத்த அரசு பள்ளிக்குமான வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது. மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த ஓர் திட்டமே ஆதித்யா எல்1 திட்டமாகும். பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் வாயிலாகவே ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இருக்கின்றது.

இது பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிமீ தூரம் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய இருக்கின்றது. ஆனால் இதன் இலக்கு பூமியிலிருந்து 15 லட்சம் கிமீ தூரத்தில் உள்ள எல்1 பாயிண்டாகும். இந்த இடைவெளியானது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை விட நான்கு மடங்கு அதிகம் தூரம் ஆகும்.
ஆனால், சூரியனுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 1 சதவீத தூரம் மட்டுமே ஆகும். லக்ராஞ்ஜ் பாயிண்ட் (Lagrange point 1), இதையே எல்1 என குறிப்பிடப்படுகின்றது. இங்கேயே ஆதித்யா எல்1 விண்கலம் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. இந்த பகுதியை இஸ்ரோ தேர்வு செய்ய ஓர் முக்கியம் காரணம் இருக்கின்றது.

இங்கேயே சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசை சமநிலையில் இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே எல்1 பாயிண்டில் ஆதித்யா எல்1 விண்கலத்தை நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக குறைவானப் பொருளைக் கொண்டு நீண்ட நாட்களுக்கு அதனால் விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும்.
ஆதித்யா எல்1 விண்கலத்தில் பல்வேறு பேலோடுகள் (ஆய்வு கருவிகள்) பொருத்தப்பட்டு இருக்கின்றன. விஇஎல்சி- IIA, ஸூட் ஐசியுஏஏ, சோலக்ஸ்-யுஆர்எஸ்சி, மேக்னட்டோ மீட்டர் - லியோஸ், ஆஸ்பெக்ஸ்-பிஆர்எல் ஆகியவையே அந்த ஆய்வு கருவிகள் ஆகும். இவையே சூரியனை மிகவும் ஆழமாக ஆராய உதவியாக இருக்கப் போகின்றன. சுமார் ஐந்தாண்டுகள் வரை விண்ணில் இருந்து சூரியனை இந்த கலம் ஆய்வு செய்ய இருக்கின்றது.

மேலும், விஞ்ஞானிகள் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கைச் சென்றடைய ஏறத்தாழ 4 மாதங்கள் வரை ஆகும் என கணித்திருக்கின்றனர். இந்த நான்கு மாத விண்வெளி பயணத்தைத் தொடர்ந்தே ஆதித்யா எல்1 விண்கலம் சூரியன் மேல் மற்றும் உட்புற அடுக்குகளான ஃபோடோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் கொரோனா ஆகிய அடுக்குகளை ஆராய இருக்கின்றது.
இவற்றை ஆராயவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேலோடுகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. சூரியனின் இயக்கவியல், வெப்பமாக்கல் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மா வெளியேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய அந்த கருவிகள் பெரும் உதவியாக இருக்கும். இவற்றை கண்கானிப்பது மற்றும் ஆய்வு செய்வதன் வாயிலாக, சூரியனில் நடைபெறும் அணுக் கரு இணைவைப் பற்றி இன்னும் தெளிவாக நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.

இதை அறிந்துக் கொள்வதன் வாயிலாக தற்போது பூமியில் உள்ள அணு உலைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும், சூரியனில் உருவாகும் புயல்கள் மற்றும் அதனால் பூமியில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிந்துக் கொள்ளவும் முடியும் என்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய பலதரப்பட்ட சிறப்புகள் கொண்ட விண்கலத்தையே இஸ்ரோ தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கின்றது. இதனால், சூரியனை ஆய்வு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கின்றது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவைத் தொடர்ந்தே இந்தியாவும் சூரியனை ஆய்வு செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









