சீனாவா? இந்தியாவா? ஒரு கை பாத்துருவோம்.. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கிய இஸ்ரோ தமிழர்!
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணியில் சென்று கொண்டுள்ள சீனாவுக்கு, இந்தியா கடும் போட்டியை வழங்கும்.
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணியில் சென்று கொண்டுள்ள சீனாவுக்கு, இந்தியா கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் வழக்கம் போல பாதிக்கப்பட்டிருப்பது மிடில் கிளாஸ் வர்க்கம்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பம், மாதந்தோறும் பெட்ரோல், டீசலுக்கு என பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். வரும் 2030ம் ஆண்டுக்குள், இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும் லித்தியம் இயான் பேட்டரிகளையே விரும்புகின்றன. தரமான லித்தியம் இயான் பேட்டரிகளில் நீண்ட நேரம் சார்ஜ் நிலைத்து நிற்கும். எனவே எலக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் கூட, தொலை தூர பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும்.

ஆனால் இந்தியாவில் போதிய அளவில் லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி பிளாண்ட்டுகள் கிடையாது. எனவே சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா அதிக அளவில், லித்தியம் இயான் பேட்டரிகளை இறக்குமதி செய்து வருகிறது.

இதன்காரணமாக லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை அதிகமாக உள்ளன. லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை அதிகம் என்பதால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் உயர்ந்து விடுகிறது. எனவே எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது.

எனவே லித்தியம் இயான் பேட்டரிகளின் விலையை குறைப்பது மட்டுமே, இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக இந்தியாவின் முதல் லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி திட்டம், தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (Indian Space Research Organisation) களமிறங்கியுள்ளது. இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில், லித்தியம் இயான் பேட்டரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரோ அமைப்பின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரானது, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே லித்தியம் இயான் பேட்டரிகளை விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் உருவாக்கி கொண்டுள்ளது.

தற்போது லித்தியம் இயான் பேட்டரியை உருவாக்கும் டெக்னாலஜியை, இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள, விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் முன்வந்துள்ளது. இதன்மூலம் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டிலேயே லித்தியம் இயான் பேட்டரிகளை உருவாக்க முடியும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ''லித்தியம் இயான் பேட்டரிகளை அதிக அளவில் உருவாக்கும் திறன் உடைய உண்மையான இந்திய நிறுவனங்களுக்கு, லித்தியம் இயான் பேட்டரி தொழில்நுட்பத்தை வழங்க தயாராக உள்ளோம்'' என்றார்.

இஸ்ரோ தலைவர் சிவன் மேலும் கூறுகையில், ''ஆனால் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளோம். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் வழங்கப்படாது. இந்திய நிறுவனங்களுக்கு லித்தியம் இயான் பேட்டரி தொழில்நுட்பத்தை வழங்கும் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும்'' என்றார்.

இந்திய நிறுவனங்களுக்கு லித்தியம் இயான் பேட்டரி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஓராண்டாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நிதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளுடன் இஸ்ரோ தொடர்பில் இருந்து வருகிறது.

இஸ்ரோவின் இந்த முயற்சியால், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்திய நிறுவனங்கள் லித்தியம் இயான் பேட்டரிகளை இறக்குமதி செய்வது குறையும். இதன்மூலமாக லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை குறைந்து, எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.

இஸ்ரோவிடம் இருந்து லித்தியம் இயான் பேட்டரி தொழில்நுட்பத்தை வாங்க விருப்பமுள்ள இந்திய நிறுவனங்கள், 1 கோடி ரூபாயை ஒரு முறை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லித்தியம் இயான் பேட்டரிகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சமீப காலமாக இந்தியா அடைந்து வரும் முன்னேற்றங்கள் 'பாசிட்டிவ்' ஆக உள்ளன. இதன்மூலம் 2030ம் ஆண்டுக்குள் இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்ற இலக்கை எட்டி விட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சீனாதான் வெகுவாக முன்னேறி கொண்டிருக்கிறது. எனவேதான் சீனாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் சமீபத்திய முன்னேற்றங்களால், சீனாவை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு வெகுவாக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவால் சாதிக்க முடியாதவற்றையும், இஸ்ரோ சாதித்து காட்டியுள்ளது. ஒரு சில தோல்விகள் என்றாலும் கூட, இஸ்ரோ தொட்டதெல்லாம் பொன்தான். எனவே இஸ்ரோவின் தற்போதைய முயற்சியும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரர் ஓர் தமிழர். ஆம், இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள சிவன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாரக்காவிளை என்ற கிராமம்தான், இஸ்ரோ தலைவர் சிவனின் சொந்த ஊர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








