மின்சார வாகனங்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் இஸ்ரோவின் ‘மலிவு விலை’ பேட்டரி..!
ஆட்டோமொபைல் துறையையே மாற்றியமைக்கப்போகும் புதிய லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வாகனங்களுக்கான அதிக சக்தி வாய்ந்த பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட துறை புதிய மாற்றத்தை காண இருக்கிறது. இதைப் பற்றி மேலும் விரிவாக காணலாம்.

கார்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் என அனைத்திலுமே பேட்டரியின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக எடை கொண்டதாகவும், அளவில் பெரிதாகவும், குறைந்த சேமிப்பு திறன் கொண்டதாகவும் தான் உள்ளது.

இந்த குறையை போக்க வித்தியம் அயன் பேட்டரிகளை தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தித் தருமாறு இஸ்ரோவிடம் மத்திதிய அரசு வலியுறுத்தியிருந்தது. அதற்கினங்க தற்போது லித்தியம் அயன் பேட்டரிகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது இஸ்ரோ நிறுவனம்.

இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பேட்டரிகள், வழக்கமான பேட்டரிகளைக் காட்டிலும் அதிக ஆற்றலுடன் (பவர்), எடை குறைவானதாகவும், அளவில் சிறியதாகவும், மலிவான விலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன்னதாக, செயற்கைக்கோள் மற்றும் செயற்கைக்கோள்களை செலுத்தும் வாகனங்களளுக்காகவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேட்டரிகளை தயாரித்துள்ளது இஸ்ரோ நிறுவனம்.

இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம், பேட்டரிக்களின் தற்போதைய நிலையை தலைகீழாக மாற்றிவிடும் என நம்பப்படுகிறது. கார்கள், எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரியின் பயன்பாடு தற்போது அதிமுக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. எனவே இத்தொழில்நுட்பத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ள அனுமதிக்குமாறு இஸ்ரோவிடம் கோரிக்கை வைத்துள்ளது அரசு.

நாட்டின் முக்கியமான ஆட்டொமொபைல் நிறுவனங்கள், பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட இதுதொடர்பாக இஸ்ரோவை அனுகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மஹிந்திரா, ரெனால்ட், ஹுண்டாய், நிசான், டாடா மோட்டார்ஸ், ஹை எனெர்ஜி பேட்டரிஸ் நிறுவனம், பெல் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள இஸ்ரோவிடம் தங்களது ஆவலை ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகை மாசுவை ஏற்படுத்தும் பெட்ரோல் - டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்துவதோடு அதற்கு மானியமும் அளித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவையாக இருப்பதே ஆகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் இதயமாக இருப்பது பேட்டரிக்களே. தற்போது பேட்டரிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, இவை அதிக விலை கொண்டதாகவும் உள்ளது.

இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேட்டரி தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் கூட்டணி சேர உள்ளது இஸ்ரோ. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஒரே நிறுவனத்திடம் கொடுத்தால் அதன் விலை போட்டிபோடும் வகையில் இருக்காது என்பதால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேட்டரிகளை தயாரிக்க ஆவலாக இருக்கும் தனியார் நிறுவனங்களையும் கண்டறிந்து அவற்றிடம் இத்தொழில்நுட்பத்தை அளிக்க இஸ்ரோ நிறுவனம் முன்வர வேண்டும் என்றும் அப்போது தான் இத்தொழில்நுட்பம் மலிவான விலையில் மக்களுக்கு சென்றடையும் என்று மத்திய அரசு இஸ்ரோவை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








