மூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதி... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்!
இணையவேகத்தை அதிகரிப்பதற்காக ஜி சாட்-11 என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி இருக்கிறது. இதுவரை இஸ்ரோ தயாரித்த செயற்கைகோள்களில் மிக பிரம்மாண்டமானதாக இந்த செயற்கைகோள் குறிப்பிடப்படுகிற
அதிவேக இணையதள வசதியை அளிப்பதற்காக இஸ்ரோ அமைப்பு தயாரித்துள்ள, மிக பிரம்மாண்டமான ஜி சாட்- 11 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

அதிவேக இணையதள சேவைக்காக ஜி சாட்-11 என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி இருக்கிறது. இதுவரை இஸ்ரோ தயாரித்த செயற்கைகோள்களில் மிக பிரம்மாண்டமானதாக குறிப்பிடப்படுகிறது.

அதாவது, இது பல சிறிய செயற்கைகோள்களின் ஒருங்கிணைந்து செயல்படும் தொகுப்பு போல இஸ்ரோ குறிப்பிடுகிறது. இந்த செயற்கைகோளை ஏவுவதற்கான கட்டமைப்பு கொண்ட ஏவுதளம் இந்தியாவில் இல்லை.

இதனையடுத்து, அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

இந்த செயற்கைகோளில் 40 அதிநவீன டிரான்ஸ்ஃபான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அதிவேக இணையதள சேவையை பெறுவதற்கு வழி ஏற்படுத்தி தரும்.

அதுமட்டுமல்ல, ராணுவ ரகசியங்கள் மற்றும் தனிநபர் இணையதள பயன்பாட்டு சேவைகளின் தகவல் பரிமாற்றத்தின் பாதுகாப்பை வெகுவாக உறுதி செய்யும். இந்த செயற்கைகோளை கேம் சேஞ்சர் என்று இஸ்ரோ குறிப்பிடுகிறது.

இந்த செயற்கைகோள் மூலமாக தரவுகள் 10 ஜிபிபிஎஸ் என்ற வேகத்தில் நாட்டின் முக்கிய இடங்களில் நிறுவப்படும் வைஃபை டவர்கள் மூலமாக பெறப்பட்டு, அந்த பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் இணையதளம், மொபைல்போன் மற்றும் டிவிகளுக்கு இணையதள சேவையையும், குரல் வழி மற்றும் வீடியோ அழைப்புகளை தங்கு தடையில்லாமல் பெற வழிவகுக்கும்.

வைஃபை டவர் இல்லாமல் கூட செயற்கைகோளிலிருந்து நேரடி இணையதள சேவையை பெறுவதற்கான வசதியையும் பெற முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, கேபிள் இல்லாமலேயே செயற்கைகோளில் இருந்து டிவி, மொபைல்போனுக்கு நேரடி இணையதள சேவையை பெறுவதற்கும் உதவுமாம்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் தொடர்பு இல்லாத பகுதிகள் மற்றும் ராணுவ தகவல் பரிமாற்றம், தொலைதூர கிராமப்புற பகுதிகளுக்கு இந்த செயற்கைகோள் மூலமாக எளிதாக இணையதள வசதியையும், தொலைக்காட்சி அலைவரிசை சேவையையும் வழங்க முடியும்.

புதிய ஜி சாட்-11 செயற்கைகோள் நாளை ஜிஎஸ்எல்வி- மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இஸ்ரோ குறிப்பிடுவது போலவே, இனி அதிவேக இணையவசதியை அனைவருக்கும் கிடைக்க இந்த செயற்கைகோள் வழி செய்யும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications