சூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ! மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்!!
சூரியன் தொடர்பாக இன்னும் புரியாத புதிராகவே உள்ள கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியை இஸ்ரோ தீவிரமாக்கியுள்ளது. இதுதொடர்பான மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO - Indian Space Research Organisation) தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டுள்ளது. பல்வேறு தடைகளையும் கடந்து, சந்திராயன்-2 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருப்பதுதான் இதற்கு காரணம். ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் செயல்பட்டும் வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், நிலவை நோக்கிய தனது பயணத்தை சந்திராயன்-2 செயற்கைகோள் தொடங்கியது.

வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன் பின் நிலவின் தென் துருவ பகுதிகளை சந்திராயன்-2 செயற்கைகோள் விரிவாக ஆய்வு செய்யும். நிலவின் தென் துருவம் என்பது இதுவரை யாரும் அடையாத ஒரு பகுதி. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் உலகின் முதல் செயற்கைகோள் சந்திராயன்-2தான் என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். இதுபோன்ற காரணங்களால் உலகமே சந்திராயன்-2 செயற்கைகோளை உற்று நோக்கி கொண்டுள்ளது.

ஆனால் அந்த அழுத்தம் எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல், நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் ரிலாக்ஸாக பணியாற்றி கொண்டுள்ளனர். சந்திராயன்-2 செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியதற்காக உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்புகளான நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி ஆகியவை இஸ்ரோ அமைப்பிற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டுள்ளன. இஸ்ரோ அமைப்பிற்கு பாராட்டுக்கள் குவிவது ஒன்றும் இது முதல் முறையல்ல.

ஏற்கனவே சந்திராயன்-1 மற்றும் மங்கள்யான் திட்டங்களின் வெற்றி எதிரொலியால், உலகையே திரும்பி பார்க்க வைத்தது இஸ்ரோ. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திராயன்-1 செயற்கைகோள விண்ணில் ஏவி சாதனை படைத்தது இஸ்ரோ. சந்திராயன்-1 திட்டத்திற்கான செலவு சுமார் 386 கோடி ரூபாய் மட்டுமே. இதன்பின் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரோ ஏவிய மங்கள்யான் செயற்கைகோள் சாதனைகளின் உச்சம்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காகதான் மங்கள்யான் செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. செவ்வாய் கிரகத்தை அடையும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு இந்தியா என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைகோள் மூலம் இந்தியாவிற்கு தேடி தந்தது இஸ்ரோ. இதுபோல் இஸ்ரோவின் சாதனைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். அதுவும் மிக குறைவான பட்ஜெட்டில் பல்வேறு வெற்றிகளை தொடர்ச்சியாக ஈட்டி வருகிறது இஸ்ரோ.

இந்த சூழலில் இஸ்ரோவின் கவனம் அடுத்ததாக சூரியன் மீது திரும்பியுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்-1 (Aditya-L1) என்ற விண்கலத்தை இஸ்ரோ வெகு விரைவில் விண்ணில் ஏவவுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2020ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சூரியனின் கொரோனா (Corona) பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காகவே ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கொரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு (Outer Layer) ஆகும். இது பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. பருவ நிலை மாற்றத்தில் கொரோனா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கொரோனா தொடர்பான பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளன.

''சூரியன் தொடர்பான இயற்பியல் ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு சில கேள்விகள் விடைக்காணப்படாமல் உள்ளன. இதில், சூரியனுடையே கொரோனா பகுதி இவ்வளவு அதிகமாக வெப்பமடைவது எப்படி? என்பதும் ஒன்று'' என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுபோன்ற ரகசிய முடுச்சுகளை எல்லாம் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 அவிழ்க்கும் என நம்பலாம். எவ்வளவு தகவல்களை சேகரிக்க முடியுமோ, அவ்வளவு தகவல்களையும் ஆதித்யா எல்-1 திரட்டும்.

ஆதித்யா எல்-1 விண்கலம்தான் இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதித்யா எல்-1 தற்போதே கவனம் பெற தொடங்கியுள்ளது. ஆதித்யா எல்-1 திட்டப்பணிகளில் இந்தியாவின் பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளும் இஸ்ரோவிற்கு தோள் கொடுக்கவுள்ளன. சூரியன் மட்டுமல்ல. வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கும் செயற்கைகோள் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ எப்போது செயற்கைகோளை ஏவும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் வெள்ளி கிரகத்திற்கு இஸ்ரோ செயற்கைகோளை ஏவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் மற்றும் வெள்ளி என அடுத்தடுத்து பெரிய பெரிய ஆராய்ச்சி திட்டங்களை கையில் எடுத்துள்ளதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாழ்த்துக்கள் இஸ்ரோ!! இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டு வரும் விஞ்ஞானி சிவன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








