இந்த விலை உயர்ந்த பரிசை ஊழியர்கள் ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க! இங்க வேலை கிடைச்சா வாழ்க்கை எங்கயோ போயிரும்!
உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தற்போது ஒருவிதமான பீதியில் உள்ளனர். லே ஆஃப் (Lay Off), அதாவது பணி நீக்க பிரச்னைதான் இதற்கு காரணம். கூகுள் (Google), ஃபேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமான (Parent Company) மெட்டா (Meta) உள்பட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில், இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனம் (IT Company) ஒன்று தனது ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியிருப்பது அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்ட செயல்பட்டு வரும் ட்ரிதயா டெக் (Tridhya Tech) என்ற ஐடி நிறுவனம்தான் தற்போது தனது ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

13 பேருக்கு அதிர்ஷ்டம்!
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நன்றாக வேலை செய்த 13 ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு புத்தம் புதிய காரை ட்ரிதயா டெக் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இந்த ஊழியர்கள் அனைவருக்கும் பரிசாக வழங்கப்பட்டிருப்பது, டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) கார்கள் ஆகும். இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற கார்களுடன் டொயோட்டா க்ளான்சா கார் போட்டியிட்டு வருகிறது.
அந்த மனசுதான் சார் கடவுள்!
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை (Price) 6.59 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். வேலையில் வைத்திருப்பார்களா? அல்லது நீக்கி விடுவார்களா? என பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களும் பயந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு காரை தனது ஊழியர்களுக்கு ட்ரிதயா டெக் நிறுவனம் பரிசாக வழங்கியிருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

முதலாளினா இப்படி இருக்கணும்!
இதுகுறித்து ட்ரிதயா டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் மர்னாட் கூறுகையில், ''எங்கள் நிறுவனம் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு ஊழியர்கள்தான் காரணம். ஊழியர்கள் கடினமாக உழைத்த காரணத்தால்தான், எங்கள் நிறுவனத்தால் புதிய உயரங்களை தொட முடிந்தது. எனவே நிறுவனம் சம்பாதித்த லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.
இனி ஊழியர்கள் எல்லாரும் தீயா வேலை செய்ய போறாங்க!
எதிர்காலத்திலும் ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட பரிசுகளை வழங்கவுள்ளதாக ட்ரிதயா டெக் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. ட்ரிதயா டெக் நிறுவனம் தனது வணிகத்தில் புதிய உச்சங்களை தொடுவதற்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ட்ரிதயா டெக் நிறுவனத்தின் ஊழியர்கள் முன்பை காட்டிலும் இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றுவதற்கு இந்த அறிவிப்பு தூண்டுதலாக அமையலாம்.
காலம் மாறி போச்சு!
ட்ரிதயா டெக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ள டொயோட்டா க்ளான்சா காரானது ஆரம்பத்தில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் தற்போது இந்த காரில் டொயோட்டா நிறுவனம் சிஎன்ஜி ஆப்ஷனையும் வழங்குகிறது. டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷன் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி (Toyota Urban Cruiser Hyryder CNG) வெர்ஷனையும் டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனம் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளது. அத்துடன் ஹைப்ரிட் கார்கள் (Hybrid Cars) சந்தையிலும் டொயோட்டா நிறுவனம் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் அதுவும் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








