நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள்... எந்த நிறுவனத்தில் தெரியுமா?
நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களை பரிசாக வழங்க முன்னணி நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் கார் என்பது ஆடம்பரமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. ஒரு குடும்பத்திற்கு ஒரு காராவது தேவை என்ற நிலைமைதான் தற்போது காணப்படுகிறது. எனவே சொந்தமாக ஒரு காரை வாங்கி விட வேண்டும் என பலரும் லட்சியம் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த லட்சியத்தை அனைவராலும் நிறைவேற்ற முடிவதில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்கள் உழைப்பை பாராட்டி, காரை பரிசாக வழங்கினால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடைய சொகுசு கார் என்றால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

உண்மையில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கு விரைவில் வாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். ஆம், நன்றாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்குவதற்கு ஹெச்சிஎல் நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் தற்போது ஹெச்சிஎல் நிறுவன வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன், ஹெச்சிஎல் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வீட்டிற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு காரை ஓட்டி செல்வார்கள். ஆனால் இந்த திட்டம் புதியது கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டிலும் இதேபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்தியது. அப்போது சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 50 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் வழங்கப்பட்டன. ஆனால் பின் வந்த நாட்களில், இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அதே திட்டம் மீண்டும் ஒரு முறை முன்மொழியப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தகைய திட்டத்தின் மூலமாக ஊழியர்களின் பணி திறன் அதிகரிக்கும் என்று ஹெச்சிஎல் நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஹெச்சிஎல் நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கவும் இந்த திட்டம் உதவி செய்யும்.

இதற்கு முன்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஒரு சில வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள், தங்கள் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் கார் கனவுகளை நிறைவேற்றி கொள்ளவும் உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற மிக விலை உயர்ந்த கார்களை வழங்குவது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நெருக்கடியால் பலர் வேலையிழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஹெச்சிஎல் முன்மொழிந்துள்ள திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications