போலீஸ் வாகனமாக மாறிய சுஸுகி ஜிம்னி.. இந்த காரை இத்தாலி நாட்டு போலீஸ் வாங்குறதுக்கு இதுதான் காரணமா!
இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த கார் மாடல், உலக சந்தையில் சுஸுகி ஜிம்னி (Suzuki Jimny) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலையே இத்தாலி அதன் வன காவல்துறையின் பயன்பாட்டில் இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்கள் சொந்த நாட்டின் தயாரிப்புகள் பல விற்பனையில் இருக்கின்றநிலையில், இந்த காரை ஏன் அவர்கள் களமிறக்கினார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கலாம். இந்த காரில் சுஸுகி 4X4 திறனை வழங்கி இருக்கின்றது. இதுவே இத்தாலி வன காவல்துறையில் இணைப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

எந்த மாதிரியான கரடு முரடான பாதையாக இருந்தாலும் சமாளிக்கும் திறனை காருக்கும் வழங்கும் ஓர் தொழில்நுட்பமே இதுவாகும். காடுகளில் சாலைகள் சீராக இருக்காது, பாறை கற்களும், பள்ளம்-மேடுகளும், நீர் நிறைந்த பகுதிகளையும் கொண்டதாக இருக்கும். இத்தகைய பகுதிகளுக்கு ஏற்ற ஓர் தயாரிப்பாக சுஸுகி ஜிம்னி காட்சிளிக்கின்றது.
இதனால்தான் இந்தியாவிலும் காவல்துறை மற்றும் ராணுவ பயன்பாட்டில் இந்த கார் உள்ளது. ஏற்கனவே இத்தாலி நாட்டு ராணுவ பயன்பாட்டில் 10க்கும் மேற்பட்ட சுஸுகி ஜிம்னி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே தற்போது மேலும் சில யூனிட்டுகள் அந்நாட்டின் வன பாதுகாவல் பிரிவில் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த முறை ஒட்டுமொத்தமாக 4 யூனிட்டுகள் இணைக்கப்பட்டு உள்ளன. அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், காவலர்கள் வாகனம் என்பதற்கான சைரன் மற்றும் லைட்டுகளும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர காரின் உட்பக்கத்தில் சில கூடுதல் கருவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில் காவலர்களுக்கான ரேடியோ, வாக்கி-டாக்கி சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல மாற்றங்கள் காவலர்களுக்கு தோதுவாக இருக்கும் பொருட்டு சுஸுகி ஜிம்னியில் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றன. மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னியே வாங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் இருப்பது ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி ஆகும்.
விரைவில் இதன் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த காலங்களில் இந்த கார் மாடலின் சோதனையோட்டம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இந்த கார் மாடல் ரூ. 12.74 லட்சத்துக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் விற்பனையில் 5 கதவுகள் கொண்ட ஜிம்னி காரில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.
பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே ஜிம்னியில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டீசல் ஆப்ஷன் இதில் வழங்கப்படவில்லை. ஆனால், இதன் போட்டியாளனான மஹிந்திரா தார், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், இதன் மற்றுமொரு போட்டியாளனான ஃபோர்ஸ் கூர்கா 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் ஆப்ஷனிலும், டீசல் மோட்டார் ஆப்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஜிம்னி ஓர் ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த ஆஃப்ரோடு எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆறு ஏர் பேக்குகள் என ஏகப்பட்ட அம்சங்களை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆஃப்-ரோடு பயணங்களை அதிகம் விரும்புவோர் மத்தியில் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே வெளிநாட்டிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








