இந்த பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன தெரியுமா? சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் செய்த புதுமையான காரியம்!
குர்கான் நகரை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய கார்களின் சீட் பெல்ட்கள் மூலம், பேக்குகள், பர்ஸ்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. கேட்பதற்கே சுவாரஸ்யமாக உள்ளதா? குர்கான் நகரை சேர்ந்த ஜாக்ரி பேக்ஸ் என்ற நிறுவனம்தான் இதனை செய்து வருகிறது. ஜாக்ரி பேக்ஸ் நிறுவனம் இதனை வெற்றிகரமான தொழிலாக மாற்றி காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் செயல்படும் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஏராளம். இதில், சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விடுகின்றன. இதில், ஜாக்ரி பேக்ஸ் நிறுவனமும் ஒன்று. உலகில் மிகப்பெரிய கார் சந்தைகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கார்களின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இதில் சில கார்கள் விபத்தில் சிக்கியவையாக உள்ளன. இன்னும் சில கார்கள் அதிக வயதின் காரணமாக ஸ்கிராப் செய்யப்படுகின்றன. கார்களின் பெரும்பாலான பாகங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு விடும். கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பெரும்பாலான பாகங்களை மறுசுழற்சி செய்து விடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் சீட் பெல்ட்கள் வீணடிக்கப்படுகின்றன. இங்கேதான் கௌதம் மாலிக் தனித்து தெரிகிறார். இவர் ஜாக்ரி பேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். உண்மையில் இது மிகவும் எளிமையான ஐடியாதான். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பழைய, அழுக்கு படிந்த கார் சீட் பெல்ட்கள் கொண்டு வரப்படுகின்றன.

பின்னர் அவை சுத்தம் செய்யப்பட்டு, பல்வேறு பொருட்களாக மாற்றப்படுகின்றன. அத்துடன் அவற்றுக்கு பல்வேறு வண்ணங்களும் கொடுக்கப்படுகிறது. இறுதியாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜாக்ரி பேக்ஸ் நிறுவனம் தற்போது வரை சுமார் 4 ஆயிரம் மீட்டர் சீட் பெல்ட்டையும், சுமார் ஆயிரம் மீட்டர் கார்கோ பெல்ட்களையும் மறுசுழற்சி செய்துள்ளது.

அவை வழக்கமான பேக்குகள் மற்றும் லேப்டாப் பேக்குகள் ஆகவும், பர்ஸ்கள் ஆகவும், பாஸ்போர்ட்களை வைக்கும் பைகள் ஆகவும் என பல்வேறு பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகள் மிகவும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையின் அங்கீகாரத்தையும் ஜாக்ரி பேக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஜாக்ரி பேக்ஸ் நிறுவனத்தை போல் இந்தியாவில் இன்னும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அசத்தி கொண்டுள்ளன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

இதற்கு ஏத்தர் நிறுவனத்தை மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம். சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏத்தர், இன்று இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதுமையான செயல்பாடுகள் உண்மையில் எப்போதும் பாராட்டுக்கு உரியவைதான்.


Click it and Unblock the Notifications








