எருமை மாடு மீது மோதி உருக்குலைந்த ஜாகுவார் கார்!
கர்நாடக மாநிலத்தில் அதிவேகத்தில் சென்ற ஜாகுவார் கார் எருமை மாடு மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.
குடிபோதை, விதிமீறல் என விபத்துகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நம் நாட்டில் நடைபெறும் விபத்துகளுக்கு சாலையின் குறுக்கே வரும் விலங்குகள் மீது வாகனங்கள் மோதுவதும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

இதற்கு உதாரணமாக, சமீபத்தில் கர்நாடகாவில் நடந்துள்ள விபத்து கார் ஓட்டுனர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. அதிவேகத்தில் சென்ற ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ஒன்று சாலையின் குறுக்கே வந்த எருமை மாட்டின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

எருமை மாட்டின் மீது மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பல்டியடித்துள்ளது. இதில், கார் மிக மோசமாக உருக்குலைந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயங்களுடன் தப்பி இருப்பதாக தெரிகிறது.

இந்த விபத்தில் சிக்கிய எருமை மாடும் படுகாயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கர்நாடக மாநிலம் சிவமோகா அருகில் உள்ள அயனூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து முழுமையானத் தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
Accident Images Source: Team BHP

இந்த நிலையில், சிறந்த கட்டுமானம், அதிக பாதுகாப்பு வசதிகள் இருந்தும் ஜாகுவார் கார் மிக மோசமான விபத்தை சந்தித்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில எளிய உபாயங்களை மனதில் வைத்து கார் ஓட்டுவது சாலச் சிறந்தது.

கார் விபத்துக்களுக்கு அடிப்படையில் வேகம்தான் முக்கிய காரணம். சாலை நிலைக்கு தக்கவாறு வேகத்தை நிர்ணயித்து செல்ல வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற விலங்குகள் நடமாட்டம் இருப்பது சகஜம்.

எனவே, இதுபோன்ற சாலைகளில் மிக கவனமாக செல்ல வேண்டும். தூரத்தில் விலங்குகளை பார்த்தால் உடனடியாக வேகத்தை குறைத்துவிடுவது அவசியம். அது எந்த பக்கம் செல்லும் என்பது தெரியாது. அத்துடன், கடந்து சென்றுவிடலாம் என்ற கணித்துக் கொண்டு அசட்டையுடன் கார் ஓட்டுவது இதுபோன்று ஆபத்தை விளைவித்துவிடும்.

குறிப்பாக, இரவு நேரங்களில் விலங்குகள் நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுடைய சாலைகளில் செல்லும்போது அதிக கவனம் தேவை. அத்துடன், இதுபோன்ற சாலைகளை இரவு நேரங்களில் தவிர்ப்பதும் அவசியம்.

ரூ.70 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த ஜாகுவார் காரில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. இருந்தும், அதிவேகத்தில் சென்றதால், ஓட்டுனருக்கு காரை கடுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விபத்தில் சிக்கி இருக்கிறது.

எனவே, சீரான வேகத்தை கடைபிடித்து ஓட்டுவதே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும். வேகத்தைவிட விவேகம் முக்கியம் என்பதை மனதில் வைத்து கார் ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணமும் சிறப்பானதாக அமையும்.


Click it and Unblock the Notifications








