பிரதமர் மோடி இதை பார்த்தால் கண் கலங்கிடுவாரு!! குஜராத்தில் இருந்து இதுக்காகவே காரை எடுத்து வந்திருக்காரு போல!
ஜி20 உச்சி மாநாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது விலையுயர்ந்த காரை தேசிய கொடியின் நிறங்களில் மாற்றிக் கொண்டுள்ளார். யார் அந்த குஜராத் மனிதர்? தனது எந்த விலையுயர்ந்த காரை அவர் இவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளார் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
உலகின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று ஜி20 உச்சி மாநாடு ஆகும். தெற்காசியாவிலேயே முதல்முறையாக நம் இந்தியாவில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் நடக்கவுள்ள இந்த பொருளாதாரம் சார்ந்த மாநாட்டில் 19 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இப்படிப்பட்ட உலகின் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று நம் நாட்டில் நடைபெறவுள்ளது இந்திய மக்களுக்கே பலருக்கு தெரியவில்லை என்பதுதான் இதில் சோகமான விஷயம். ஜி20 உச்சி மாநாடு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என்றாலும், இப்போதும் கிராம புறங்களில் வாழும் மக்களில் பலர் இதனை பற்றி அறியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
ஆதலால், இந்திய குடிமக்களாகிய நாம் ஜி20 உச்சி மாநாடு குறித்து சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் பரப்புரை செய்வது நமது கடமையாகும். குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு படி மேலே சென்று தனது விலையுயர்ந்த ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை இந்திய தேசிய கொடியின் நிறங்களில் பெயிண்ட் செய்து, அதற்கு மத்தியில் ஜி20 உச்சி மாநாடு குறித்த வாக்கியங்களை கொடுத்துள்ளார்.

இந்த குஜராத் நபரது பெயர் சித்தார்த் தோஷி ஆகும். இதன் மூலம், மக்களிடத்தில் ஜி20 உச்சி மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கும் இந்த நபர், தனது ஜாகுவார் காரை குஜராத்தில் இருந்து டெல்லி வரையில் ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு சித்தார்த் தோஷி அளித்துள்ள பேட்டியில், "இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவது நமக்கும் இந்தியாவுக்கும் பெருமையான தருணம்.
எனது கார் மூலம் நாட்டின் முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள்" என்பதாகும். சித்தார்த் தோஷி ஒரு பிஸ்னஸ்மேன். அதனை காட்டிலும், தன்னை பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகனாகவே பிறரிடத்தில் இவர் அறிமுகப்படுத்தி கொள்கிறார். தனது ஜாகுவார் எக்ஸ்.எஃப் செடான் காரை தேசிய கொடியின் நிறங்களில் பெயிண்ட் செய்துள்ள சித்தார்த், இந்த பிரத்யேகமான பெயிண்ட்டை மேட் ஃபினிஷிங்கில் கொடுத்து இருப்பது பார்ப்பதற்கு கவர்ச்சிக்கரமானதாக உள்ளது.

காரின் பக்கவாட்டிலும், முன்பக்க பொனெட்டிலும் ஜி20 உச்சி மாநாட்டின் லோகோவை பார்க்க முடிகிறது. சித்தார்த் தோஷி வைத்திருப்பது ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரின் பிரஸ்டீஜ் வேரியண்ட்டை ஆகும். இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஜாகுவார் கார்களில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 180 பிஎஸ் மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
விற்பனையில் இந்த ஜாகுவார் கார் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களுக்கு போட்டியாக விளங்குகிறது. சித்தார் தோஷி இதேபோன்று கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் போதும், மத்திய அரசின் 'அஸாடி கா அம்ரிட் மஹோட்சவ்' திட்டத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தேசிய கொடியின் நிறங்களில் வ்ராப்களை ஒட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த செய்தியில் பெயிண்ட் செய்துள்ளார் என நாங்கள் கூறியிருப்பது எல்லாம் காரில் அவர் வ்ராப்களை ஒட்டியுள்ளார் என அர்த்தமாகும். ஏனெனில் வ்ராப்களை எளிதாக நீக்க முடியும் மற்றும் விரைவாக ஒட்டவும் முடியும். இருப்பினும் அதற்கும் கணிசமான தொகை செலவாகும். பிஸ்னஸ்மேனாக இருப்பதால் சித்தார்த் தோஷிக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
