இவர்தாங்க இந்தியாவின் எலான் மஸ்க்!! 13 வருட உழைப்பு... கணித ஆசிரியரின் சோலார்-பவர் கார்!
ஜம்மு-காஷ்மீரில் கணித ஆசிரியர் ஒருவர் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த புதுமையான காரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரை சேர்ந்தவர் மிர் பிலால். பொறியியல் பட்டதாரியான இவர் தற்சமயம் அருகில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதுவும் இவரது பகுதிநேர பணியே. ஏனெனில் சுமார் கடந்த 13 வருடங்களாக சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரை தயாரிக்கும் பணியில் மிர் பிலால் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அதில் தற்போது இறுதியாக அனைத்து பணிகளையும் நிறைவும் செய்துள்ளார். தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் & டீசல் விலையே இவரை சோலார்-பவர் காரை உருவாக்க வைத்துள்ளது. இந்த காரை உருவாக்கும் பணிகள் அனைத்தையும் இத்தனை வருடங்களாக தனது வீட்டில் மேற்கொண்டு வந்துள்ளார், மிர் பிலால்.

இந்த சூரிய-ஒளி கார் குறித்து மிர் பிலால் சமீபத்தில் அளித்த பேட்டியில், "முதலில் மாற்றுத்திறனாளிக்களுக்கான காரை தயாரிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், சில நிதி சிக்கல்களால், திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இருப்பினும், 2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் சொகுசு காரை உருவாக்கும் திட்டத்தை இந்த ஆண்டு என்னால் முடிக்க முடிந்தது" என்றார்.

மிர் பிலாலின் இந்த கார் சூரிய ஒளியில் இயங்குவது மட்டுமின்றி, தோற்றத்திலும் அட்டகாசமானதாக உள்ளது. இதனை இவர் பல வருடங்களுக்கு முன்னரே வடிவமைத்தது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த காரின் வடிவமைப்பு குறித்து பிலால் கருத்து தெரிவிக்கையில், "மற்ற சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது.

அதேசமயம் குறைந்த சூரிய ஒளியில் கூட அதிகப்பட்ச ஆற்றலை உருவாக்கும் மோனோகிரிஸ்டலின் சோலார் பேனல்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் இவை அதிக திறன்களை கொண்டவைகளாக விளங்குவது மட்டுமின்றி, காரில் குறைந்த பரப்பளவையும் ஆக்கிரமித்துள்ளன" என்றவர் சூரிய ஒளியாற்றல் தான் எதிர்காலமாக இருக்கும் என்பதை அழுத்தமாக கூறுவதோடு, அதில் ஒரு பங்காற்ற விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

"இந்த கார் முற்றிலுமாக ஆட்டோமேட்டிக்கானது மற்றும் உள்ளே நுழையவும், வெளியேறவும் பறவை இறக்கை போன்றதான கதவுகளை கொண்டுள்ளது" என கூறும் மிர் பிலால் இந்த காரின் தயாரிப்பிற்காக மொத்தமாக சுமார் ரூ.15 லட்சம் வரையில் செலவு செய்துள்ளார். இந்த பணத்திற்காக இவர் எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் உதவி கேட்டு நிற்கவில்லை. ஆகையால் இந்த கார் முழுக்க முழுக்க இந்த கணித ஆசிரியருக்கே சொந்தமானது ஆகும்.

இதுகுறித்து பேசுகையில், "நான் இந்த திட்டத்தை துவங்கிய போதும் சரி, நிறைவு செய்த வரையிலும் சரி எவரொருவரும் எனக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. எனக்கு தேவையான உதவி கிடைத்திருந்தால், ஒருவேளை நான் இந்தியாவின் எலான் மஸ்க்காக இருந்திருப்பேன்" என சிரித்தப்படி கூறுகிறார் மிர் பிலால். என்னதான் பொறியியல் பட்டதாரியாக இருப்பினும், கார் ஒன்றை வடிவமைப்பது என்பது சற்று சிரமம்தான்.

இந்த சோலார்-பவர் காரை வடிவமைப்பதற்காக மிர் பிலால் கடந்த 1950களில் இருந்து உருவாக்கப்பட்ட பல்வேறு லக்சரி கார்களை பற்றி படித்தும், வீடியோவில் கண்டும் பயிற்சி பெற்றுள்ளார். அத்துடன் இலக்கு மேலாண்மை நிறுவனம் ஒன்றை துவங்கியவரும், பொறியியல் மற்றும் கண்டுப்பிடிப்பாளருமான டெலோரியன் என்பவரை பற்றியும் படித்து தெரிந்துக்கொண்டுள்ள மிர் பிலால் இதுவே தனக்கு உதவியதாகவும், அதேநேரம் தன்னை சாதாரண மக்கள் வாங்கக்கூடிய வகையிலான மலிவான மற்றும் அதேசமயம் லக்சரியான தோற்றத்திலான காரை உருவாக்க ஊக்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

"மெர்சிடிஸ், ஃபெராரி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற கார்கள் பலரது கனவாக உள்ளது. மிகவும் சிலர் மட்டுமே இதனை நினைவாக்கி உள்ளனர். எல்லா மக்களுக்கும் ஆடம்பர உணர்வை வழங்க நான் விரும்பினேன்" என கூறும் மிர் பிலால் இந்த சோலார்-பவர் காரில் மேலும் சில வசதிகளை சேர்க்கும் பொருட்டு பல்வேறு வீடியோக்களை பார்த்து இன்னும் சில மாடிஃபிகேஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார். ஆனால் இதற்கு பொது மக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் ஏதேனும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என மிர் பிலால் கோரிக்கை வைக்கிறார்.


Click it and Unblock the Notifications








