கர்நாடக மாஜி மந்திரி ஜனார்த்தன ரெட்டியும், அவரது சொகுசு கார்களும்

சுரங்க தொழிலில் கொடி கட்டி பறந்து வந்த அவர் ஆடம்பரம் என்றால் அலாதி பிரியம். அரண்மனை போன்ற வீடு, வெளிநாட்டு சொகுசு கார்கள், ஹெலிகாப்டர் என ராஜபோகத்தை அனுபவித்து வந்தவர்.
குறிப்பாக, ஆடம்பர கார்கள் என்றால் ரெட்டிக்கு கொள்ளை ஆசையாம். கடந்த 2009ம் ஆண்டு அவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு நாடுகளில் அரச பரம்பரையினர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் ஆர்ஆர் பாண்டம் ஆடம்பர காரை வாங்கினார். அந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.4.5 கோடி.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கென்றே, சொகுசு பஸ் ஒன்றை ரெட்டி சொந்தமாக வைத்திருந்தார். ஒரு படுக்கையறை, சேட்டிலைட் போன், இன்டர்நெட் இணைப்பு சகல வசதிகளுடன் கூடிய அந்த பஸ்சின் மதிப்பு ரூ.4 கோடி.
இதேபோன்று, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் பயன்படுத்தும் நீண்ட கேபின் கொண்ட லிம்னாய்ஸ் என்று கூறப்படும் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
ரெட்டியின் பங்களா வாயிலை உலக புகழ்பெற்ற ஆடி ஆடம்பர கார் மற்றும் மிட்சுபிஷி பஜெரோ உள்ளிட்ட விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் அலங்கரித்தன. தவிர, 12க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களின் கார்களும் அவரது வீட்டுக்கு ஆடம்பரத்தை வாரி கொடுத்தன.
ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் உள்ளது போன்று அவரது பங்களாவில் கார் நிறுத்துவதற்கென்றே பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய பார்க்கிங் லாட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்களை பராமரிப்பதற்கென்ற ஏராளமான பணியாட்கள், மெக்கானிக்குகள் எந்நேரமும் தயாராக அங்கு இருப்பர்.
மேலும், ரெட்டி காரில் வெளியில் கிளம்பும்போது சினிமாவில் வருவதுபோன்று, முன்னும் பின்னும் ஏராளமான எஸ்யூவி கார்கள் அணிவகுக்கும். தவிர, தனது தேவைகளுக்காக அவர் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வைத்திருந்தார். அதற்கு ருக்மிணி என செல்லமாக பெயரிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சுரங்க மோசடி புகாரில் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். இதில், அவரது வீட்டில் இருந்து பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அந்த சொகுசு பஸ், 8 சொகுசு கார்கள் மற்றும் ருக்மிணி ஹெலிகாப்டர் ஆகியவற்றை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








