வீட்டிற்கு வெளியே நின்ற கார் திருட்டு... கண்டுபிடிக்க உதவி செய்தால் எவ்வளவு லட்சம் பரிசாக கிடைக்கும் தெரியுமா?
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை உயர்ந்த கார்களுக்கு எப்போதும் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் உள்ளது. விலை உயர்ந்த கார்களின் பாகங்கள் திருடுவதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கொள்ளையர்கள் கார்களை அப்படியே திருடியும் சென்று விடுகின்றனர்.

அப்படி ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம், ஜஸ்ராஜ் சிங் என்பவருக்கு சமீபத்தில் நடந்துள்ளது. ஜஸ்ராஜ் சிங்கின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது ஜீப் காம்பஸ் எஸ்யூவியை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பதை நமக்கு காட்டும் சிசிடிவி காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்றுள்ளது. கொள்ளையர்கள் ஹூண்டாய் கிரெட்டா காரில் வந்ததை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அருகே ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியை அவர்கள் நிறுத்துகின்றனர். அதன்பின் கிரெட்டாவில் இருந்து ஒருவர் இறங்கி சென்று, ஜீப் காம்பஸ் எஸ்யூவியை பார்வையிடுகிறார்.

சில வினாடிகள் கழித்து அவர் திரும்பி வந்து விடுகிறார். அதன்பின் அந்த கும்பல் தாங்கள் வந்த காரிலேயே அங்கிருந்து சென்று விட்டது. சில நிமிடங்கள் கழித்து அதே ஹூண்டாய் கிரெட்டா மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறது. இம்முறையும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அருகே அவர்கள் ஹூண்டாய் கிரெட்டாவை நிறுத்தி விட்டனர்.

இம்முறை ஜீப் காம்பஸ் எஸ்யூவியை திருடுவதற்கு தயார் நிலையில் கொள்ளையர்கள் வந்துள்ளனர். இதன்பின் கிரெட்டாவில் இருந்து ஒருவர் இறங்கி சென்று, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் கதவை திறப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த வழியாக வேறு வாகனங்கள் வரும்போது, சந்தேகம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, அவர் தனது முயற்சியை நிறுத்துவதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.

எனினும் சற்று நேரத்தில் அவர் ஜீப் காம்பஸின் கதவை திறந்து விட்டார். அதன்பின் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு அவர் முயற்சிக்கிறார். இடையே ஹசார்டு லைட்கள் ஒளிர்வதையும் நம்மால் காண முடிகிறது. அதன்பின் அந்த நபர் மீண்டும் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு சென்று, அதில் இருந்த கொள்ளையர்களிடம் ஏதோ பேசி விட்டு வருகிறார்.

அவர் பேசி விட்டு வந்தவுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பி விட்டார். அதற்கு முன்னதாக ஹூண்டாய் கிரெட்டாவும் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி, 2017 மாடல் ஆகும்.

சில்வர் நிறத்தில் அந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 'DL 12 CM 1188' என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விபரங்களை அதன் உரிமையாளர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். தனது காரை பற்றியோ அல்லது கொள்ளையர்களை பற்றியோ தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படியும் அவர் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

அத்துடன் தனது காரை மீட்க உதவி செய்யும் நபர்களுக்கு 2 லட்ச ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவரின் வாகனம் கொள்ளையடிப்பதை பார்ப்பது வருத்தமாக உள்ளது. அதுவும் வீட்டிற்கு வெளியே, சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இருந்தபோதும் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
வாகனங்களை பாதுகாப்பற்ற வகையில் சாலையோரமாக பார்க்கிங் செய்ய வேண்டாம் என இந்த நேரத்தில் வாசகர்களை கேட்டு கொள்கிறோம். நீங்கள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்தினால், அது கொள்ளையர்களுக்கு சாதகமாகவும், எளிதாகவும் அமைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எப்போதும் பாதுகாப்பான இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








