விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் பரிசு தொகையுடன் தேசிய விருது.. போலீசை கண்டு அச்சம் வேண்டாம்
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு, உதவி செய்யும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு, உதவி செய்யும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும், 1.46 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சாலை விபத்துக்களினால் படுகாயம் அடைபவர்கள், மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகின்றனர். அப்படி இருந்தும், சிகிச்சை பலன் அளிக்காமல், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

சாலை விபத்துக்களில் சிக்கிய உடன், உரிய நேரத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியில், இதனை 'கோல்டன் ஹவர்' (Golden Hour) என குறிப்பிடுகின்றனர். அதாவது விபத்து நடைபெற்றதில் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டால், அவரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகரிக்கும்.

ஆனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து கொண்டு, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற பெரும்பாலானோர் முன் வருவது இல்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில், கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்கள் மற்றும் சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சை வழங்குபவர்களுக்கு, 'ஜீவன் ரக்ஸா பதக்' (Jeevan Raksha Padak) என்ற தேசிய அளவிலான விருதை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கு தேசிய அளவிலான விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளதாக, சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

'ஜீவன் ரக்ஸா பதக்' விருதுடன் 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணை, வழக்கு, சாட்சி போன்ற சட்ட நெருக்கடிகள் காரணமாகதான், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலானோர் முன் வருவது இல்லை. இதனை கருத்தில் கொண்டு, விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன.

இதன்படி சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வருவோரை எந்த வழக்குகளுக்கும் உள்ளாக்க கூடாது. சாட்சிகளாகும்படி அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது. அவர்களுக்கு மிரட்டலோ, துன்புறுத்தலோ கொடுக்க கூடாது என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டன.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்களுக்கு, போலீசாரிடம் இருந்து எவ்விதமான தொல்லை அல்லது அலைக்கழிப்பு இருக்க கூடாது என்பதற்காகவே, இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம்.

எனினும் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயந்து கொண்டு, பெரும்பாலானோர் உதவி செய்ய முன்வருவது இல்லை. எனவே இந்த பிரச்னையை களையும் விதமாகதான், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு, விருது மற்றும் பரிசு தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








