மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா?
மாணவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக வழங்கிய அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒருவரிடம் இருந்து நமக்கு புத்தம் புதிய கார் பரிசாக கிடைப்பது என்பது உண்மையிலேயே மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்க கூடிய விஷயம். கடந்த காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கார்களை பரிசாக வழங்கியது குறித்தும், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியது குறித்தும் பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உங்களுக்கு வழங்கியுள்ளது.

மேலும் திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களின் இயக்குனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய கார்களை பரிசாக வழங்கியது குறித்தும் நீங்கள் அதிகம் கேள்விபட்டிருக்கலாம். பாகுபாலி நாயகன் பிரபாஸ் இதற்கு சமீபத்திய உதாரணம். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருக்கு ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar) காரை பரிசாக வழங்கினார்.

இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி கார் ஆகும். இந்த வரிசையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 மாணவர்களுக்கு தற்போது புத்தம் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார்கள் பரிசாக கிடைத்துள்ளன. மாணவர்களுக்கு இந்த பரிசை வழங்கியிருப்பது ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் என்பது கூடுதல் சிறப்பு.

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் ஜகர்நாத் மஹ்டோ (Jagarnath Mahto). ஜார்கண்ட் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்க முடிவு செய்திருப்பதாக ஜகர்நாத் மஹ்டோ வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியைதான் அவர் தற்போது நிறைவேற்றியுள்ளார்.

ஜார்கண்ட் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்தபடி, புத்தம் புதிய ஆல்டோ கார்களை மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்டோ இன்று (செப்டம்பர் 23) பரிசாக வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை கட்டிடத்தில் நடைபெற்றது.

நடப்பாண்டு 10ம் வகுப்பு தேர்வுகளில் மணிஷ் குமார் கட்டியார் என்ற மாணவரும், 12ம் வகுப்பு தேர்வுகளில் அமித் குமார் என்ற மாணவரும் முதலிடம் பிடித்தனர். புதிய ஆல்டோ கார்களுக்கான சாவிகளை ஜகர்நாத் மஹ்டோ அவர்களிடம் இன்று ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது மாணவர்கள் இருவரும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

எதிர்கால வாழ்க்கையில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இதுபோன்ற பரிசுகள் தங்களை இன்னமும் ஊக்குவிக்கும் என அவர்கள் கூறினர். 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த அமித் குமார் இது தொடர்பாக கூறுகையில், ''உண்மையில் இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். எங்களுக்காக இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இது எங்களை மட்டுமல்லாது, வருங்கால தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்'' என்றார். மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஆல்டோ காரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் கிடைக்க கூடிய காராக மாருதி சுஸுகி ஆல்டோ திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








