போட்டியாளரான ஜீப் இந்தியாவை வரவேற்று டிவிட் போட்ட ஜாகுவார் லேண்ட்ரோவர்!
முன்னணி கார் நிறுவனங்கள் அவ்வப்போது போட்டியாளர்களை விளம்பரம் மூலமாக சீண்டுவதும், வாங்கிக் கட்டிக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜாகுவார் நிறுவனத்தை விளம்பரம் மூலமாக சீண்டி பார்த்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு தக்க பதிலடி கிடைத்தது.
அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நூற்றாண்டு பிறந்தநாளுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் வாழ்த்து தெரிவித்ததும், அதற்கு பிஎம்பிள்யூ நன்றி பாராட்டியதும் நினைவிருக்கலாம். இவை அரிதான நிகழ்வுகளாகவே அமையும்.

அவ்வாறான ஒரு அரிய நிகழ்வு நேற்று காண முடிந்தது. அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் நேற்று இந்தியாவில் தனது புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை துவங்கியது. இந்திய ஆட்டோமொபைல் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஜீப் எஸ்யூவிகளின் வருகைதான் நேற்றைய ஹாட் டாப்பிக்காக இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியிருக்கும் ஜீப் நிறுவனத்துக்கு, அதன் போட்டியாளரான ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனம் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
"வருக ஜீப் இந்தியா" என்று குறிப்பிட்டதுடன், இந்தியாவின் சாகசம் நிறைந்த பகுதிகள் லேண்ட்ரோவருக்கு மகிழ்ச்சி தருவது போன்றே, உங்களுக்கும் மகிழ்ச்சியாக அமையும் என நம்புகிறோம்," என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
இதற்கு, ஜீப் இந்தியா நிறுவனம் உடனடியாக பதில் டிவிட்டை போட்டது. தங்கள் வரவேற்புக்கு நன்றி. அனைத்து விதமான சாகசங்களையும் எதிர்கொள்ளவே இங்கு இருக்கிறோம்," என்று பதிலளித்தது.
ஆஃப்ரோடு எனப்படும் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ற எஸ்யூவி வகை வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற இரு நிறுவனங்களும், தங்களது சந்தைப்போட்டியை மனதில் வைத்தே இவ்வாறு டிவிட்டர் மூலமாக தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளன.
அதாவது, சந்தை போட்டியையும், சவால்களையும் எதிர்கொள்ள தயார் என்பதை சூசகமாக தனது டிவிட்டர் செய்தியில் ஜீப் நிறுவனம் பகிர்ந்துள்ளது. பரஸ்பரம் இரு நிறுவனங்களும் சந்தையில் ஏற்படப்போகும் சவால்களை நாசூக்காக வெளிப்படுத்திக் கொண்டன. இந்த நிகழ்வு சமூக வலைதள வாசிகள் மத்தியிலும், ஊடகத்தினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications








