அவமானப்படுத்தி அனுப்பிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை பழிக்கு பழி வாங்கிய இந்தியர்! யார்னு தெரியாம விளையாடிட்டாங்க!
இந்தியாவில் தற்போதெல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களை பார்ப்பது சாதாரண ஒரு விஷயமாக மாறி விட்டது. ஆனால் கால் நூற்றாண்டுக்கு முன்னால் எல்லாம், அதாவது கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நிலைமை அப்படி கிடையாது. அப்போதெல்லாம் இந்திய சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பார்ப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயமாகவே இருந்தது. அந்த சமயத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை பற்றியும், அதன் கார்களை பற்றியும் பல்வேறு புரளிகள் மக்கள் மத்தியில் உலாவி கொண்டிருந்தன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டதாக உலாவி கொண்டிருந்த புரளி இதில் முக்கியமான ஒன்றாகும்.
இந்தியாவின் மன்னர்கள், நடிகர், நடிகைகள் என பலரையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அவமதித்தாக புரளிகள் சுற்றி கொண்டிருந்தன. இவை எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா? என்ற சந்தேகம் தற்போது வரை பலருக்கும் உள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்திய தொழில் அதிபர் ஒருவர், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் அவமதிக்கப்பட்ட தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழில் அதிபரே, அந்த சம்பவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார். இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஜோய் ஆலுக்காஸ்தான் (Joy Alukkas) அந்த தொழில் அதிபர். இவர் ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் (Joy Alukkas Group), தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக உள்ள நகை கடை (Jewellery) ஆகும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். ஜோய் ஆலுக்காஸ், துபாய் நகரில் செயல்பட்டு வந்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஷோரூமுக்கு, கடந்த 2000ம் ஆண்டில் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர், எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் மீது ஆர்வம் இருப்பதாகவும், எனவே அவற்றை பார்வையிட விரும்புவதாகவும் ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளார். பொதுவாக இப்படி ஒரு பதிலை சொன்னால், ஷோரூம் ஊழியர்களை கார்களை காட்டி, அவற்றை பற்றி விவரிப்பார்கள். ஆனால் ஜோய் ஆலுக்காசுக்கு நடந்ததோ வேறு.
ஆம், ஜோய் ஆலுக்காஸை, ரோல்ஸ் ராய்ஸ் டீலர்ஷிப் ஊழியர் அவமதித்துள்ளார். ''இங்கிருந்து சென்று விடுங்கள். அருகே உள்ள மிட்சுபிஷி (Mitsubishi) ஷோரூமில் கார்களை பாருங்கள்'' என்பதுதான், ரோல்ஸ் ராய்ஸ் டீலர்ஷிப் ஊழியர், ஜோய் ஆலுக்காஸிடம் கூறிய வார்த்தைகள் ஆகும். இதனை அவமானமாக உணர்ந்த ஜோய் ஆலுக்காஸ், ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என சபதமெடுத்தார்.
ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பிறகு, உண்மையிலேயே அது தேவையில்லாத ஒன்று என ஜோய் ஆலுக்காஸ் உணர்ந்துள்ளார். எனவே அந்த காரை வைத்து எப்படி தனது நிறுவனத்தை பிரபலமாக்கலாம்? என அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டம் அவர் மனதில் உதித்தது.
அதாவது குலுக்கல் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கலாம் என ஜோய் ஆலுக்காஸ் முடிவு செய்தார். வெறும் முடிவுடன் நிற்காமல், அதை செய்தும் காட்டினார். உண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய் அமைந்துள்ள நாடு), வாடிக்கையாளர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கிய முதல் ஒரு சில நகை கடைகளில், ஜோய் ஆலுக்காசும் ஒன்றாகும்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தேவையில்லை என நினைத்தாலும் கூட, ஜோய் ஆலுக்காஸ் தற்போதும் அவற்றை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) உள்ளிட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும், அதற்கு பிறகு மனதில் தோன்றிய குலுக்கல் திட்டம் குறித்தும், ஜோய் ஆலுக்காஸ் பேசிய வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த காரை எல்லாம் உங்களால் வாங்க முடியாது என்ற ரீதியில் அவமானப்படுத்தப்பட்டு, டீலர்ஷிப்பில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஜோய் ஆலுக்காஸ், தற்போது நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார். டீலர்ஷிப்பில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஜோய் ஆலுக்காஸ் செய்ததை, ஆகச்சிறந்த பழி வாங்கல் என கூறலாம்.
ஆம், யார் அவமானப்படுத்துகிறார்களோ, அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவதும், எதை செய்ய முடியாது என கூறுகிறார்களோ, அதை செய்து காட்டுவதும்தான் ஆகச்சிறந்த பழி வாங்கலாக இருக்கும். காலங்கள் மாறும். காட்சிகள் மாறும். எனவே யாராக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








