லேசா பழசாச்சு அதுக்காக சில-பல வேலைகளை பாத்து புதுசு போல மாத்திட்டாரு.. என்னங்க இவரு இப்படி இருக்காரு!
ஆடம்பர கார்களை இந்தியாவில் தொழிலதிபர்களைக்காட்டிலும் திரையுலகைச் சேர்ந்தவர்களே மிக அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என உறுதியாக சொல்லலாம் போல. அந்த அளவிற்கு திரை துறையைச் சேர்ந்தவர்கள் சொகுசு கார்களை மிக அதிக அளவில் நாட்டில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். திரை உலகைச் சேர்ந்தவர்கள் கார் வாங்கிவிட்டதாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான செய்தியை படிக்கவில்லை என்றால்தான் அதிசயம். இந்த நிலையிலேயே தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரம் ஒருவர் தான் சமீபத்தில் வாங்கிய காரை, சற்றே பழையதாகிய நிலையில் அதை மீண்டும் புதிது போல் மாற்றியிருக்கின்றார்.
வேறு யாரும் இல்லைங்க, தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த ஜூனியர் என்டிஆர்-தான் அவர் ஆவார். இவர் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.7 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பாரக்கச் செய்தார். புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 (Mercedes Maybach S580) சொகுசு கார் மாடலையே அவர் வாங்கி இருந்தார்.

இந்த காரையே அவர் தற்போது புதிய லுக்கிற்கு தற்போது மாற்றி இருக்கின்றார். மிக முக்கியமாக வோஸ்ஸன் அலாய் வீல் (Vossen alloy wheel)-களால் இந்த ஆடம்பர காருக்கு மேலும் ஆடம்பர தோற்றத்தை வழங்கி இருக்கின்றார். இந்த வீலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.17 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
அத்துடன், காரில் பொருத்தப்பட்டு இருந்து அனைத்து குரோம் அணிகலன்களையும் தற்போது அவர் கருப்பு நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார். இதன் வாயிலாக ஏற்கனவே அதிக கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளித்த அந்த கார் மாடல் தற்போது இன்னும் பலமடங்கு அதிக கவர்ச்சியானதாக மாறி உள்ளது.
முழுக்க முழுக்க கருப்பு நிறம் கொண்டதாக அந்த கார் தற்போது காட்சியளிக்கின்றது. ஆகையால் கண்களையும், மனதையும் கவரக் கூடிய வாகனமாக ஜூனியர் என்டிஆர்-இன் அந்த ஆடம்பர வாகனம் தற்போது மாறி இருக்கின்றது. இந்த வேலையை அவர் ஹைதரபாத்தைச் சேர்ந்த கவசா எனும் நிறுவனத்தின் வாயிலாகவே செய்து இருக்கின்றார்.
வேலைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே அந்த கார் ஜூனியர் என்டிஆர் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. வாகனத்திற்கு புதிய நிறத்தை வழங்கிய புது காராக மாற்றியது மட்டுமில்லைங்க. சிபிஎஃப் எனும் பாதுகாப்பு ஃபிலிமையும் காரின் மேற்பக்கத்தில் ஒட்டியிருக்கின்றார்.
இது காரின் புதுப் பொலிவை காக்கும் திறன் கொண்டது. அதாவது, ஆண்டுகள் பலவானாலும் வாகனத்தை நேத்துதான் வாங்கியது போல் அது காண்பிக்கும். இதனால்தான் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய விலை உயர்ந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 கார் மாடலை சிபிஎஃப்-ஆல் தற்போது அலங்கரித்திருக்கின்றார்.
ஜூனியர் என்டிஆர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 கார் மாடலானது மிக அதிக சொகுசு அம்சங்களைத் தாங்கிய வாகனம் ஆகும். இந்த காரில் மசாஜ் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகளே வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அதிக மிருதுவாகவும் இருக்கும்.
ஆகையால், மிகவும் கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவம் அந்த காரில் கிடைக்கும். இதைத்தொடர்ந்து, பெரிய பொழுதுபோக்கு திரை, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டுகள், மெர்சிடிஸ் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் மேபேக் எஸ்580இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கார் இணைப்பு வசதி, முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களையும் அந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 496 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூனியர் என்டிஆர் இடத்தில் ஏற்கனவே மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் தன்னுடைய 2.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை புதியதுபோல் மாற்றியிருக்கின்றார். அக்காரின் மதிப்பு மேலும் பலமடங்காக அதிகரித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








