பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகனங்களுக்கு எரிபொருள்? மாநகராட்சி நிர்வாகத்தின் அசத்தலான முயற்சி...
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் சோதனையில் மாநகராட்சி நிர்வாகம் ஒன்று வெற்றி கண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து 85 லிட்டர் எரிபொருளை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, மஹாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கல்யாணில் உள்ள பரேவ் பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுமார் 500 லிட்டர் எரிபொருள் தயாரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த எரிபொருளை ஆயில் பாய்லர்களுக்கு பயன்படுத்த முடியும். அதே சமயம் வாகனங்களிலும் பயன்படுத்த முடியுமா? என்பதை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன'' என்றனர். கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகளை அமைப்பது போன்ற புதிய முயற்சிகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகனங்களுக்கு பயன்படுத்த கூடிய வகையிலான எரிபொருள் தயாரிக்கப்பட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

இந்தியாவில் மத்திய அரசு தற்போது மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகவும் அதிகமாக இருந்து வரும் நிலையில், அதற்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், சிஎன்ஜி இந்தியர்களுக்கு ஓரளவிற்கு அறிமுகமாகி விட்டது.

அதே சமயம் எல்என்ஜி எரிபொருளின் பயன்பாடும் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளது. எல்என்ஜி மூலம் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவாகும் எனவும், உமிழ்வு அளவும் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்று எரிபொருட்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் தற்போது மத்திய அரசு பெரும் அளவில் ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசுடன் மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருவதுடன், சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications