நாடாளுமன்றத்தில் முதல்முறையா வாய் திறந்த கமல்ஹாசன்! கேட்ட முதல் கேள்வியே நாட்டின் பெட்ரோலை சந்தேகித்து...!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சி தலைவருமான கமல்ஹாசன் (Kamal Hasan), மாநிலங்களவையில் தனது முதல் எழுத்துப்பூர்வ கேள்விகளை இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்பினார். இதில், இ10 (E10) எரிபொருள் நிறுத்தப்பட்டு, 20% எத்தனால் கலக்கப்பட்ட இ20 (E20) பெட்ரோல் பயன்படுத்தப்படுவது மற்றும் அத்துடன் கல்பாக்கம் உள்ளிட்ட அணுசக்தி திட்டங்களின் காலக்கெடு குறித்து அரசு விளக்கமளிக்கக் கோரினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துவங்கிய 19-நாள் குளிர்கால கூட்டத்தொடர் இந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவு பெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களை என இரு அவைகளும் இந்த கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2025 ஜூலையில் மாநிலங்களை உறுப்பினர் (MP) ஆக தேர்வான நடிகர் கமலஹாசன் தனது முதல் உரையை கூட்டத் தொடர் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக டிசம்பர் 17இல் வழங்கினார்.

மாநிலங்களவையின் 2013ஆவது கேள்வியாக அமைந்த அதில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் மோட்டார் வாகனங்களில் இ20 எரிபொருளின் தாக்கம் குறித்துக் கேட்டார். குறிப்பாக, வாகனங்களின் மைலேஜ், என்ஜின் பாகங்கள் மற்றும் பழைய வாகனங்களுடன் இ20-இன் இணக்கத்தன்மை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என அறிய விரும்பினார்.
மேலும், அதிக இணக்கத்தன்மை கொண்ட இ10 பெட்ரோல் நாடு முழுவதும் ஏன் நிறுத்தப்பட்டது என்றும், அதை மீண்டும் ஒரு கூடுதல் ஆப்ஷனாக மக்களுக்கு வழங்க அரசு திட்டமிடுகிறதா என்றும் கமல் ஹாசன் கேள்வி எழுப்பினார். மேலும், இ20 பயன்பாட்டால் வாகனத்தில் ஏற்படக்கூடிய சேதம் அல்லது அதிகரித்த இயக்கச் செலவுகளுக்கான உத்தரவாதம், காப்பீடு அல்லது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்களையும் கோரினார்.

இந்தக் கேள்விகளுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), டிசம்பர் 17 அன்றே எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷன், இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு (ARAI) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) போன்ற அமைப்புகள் விரிவான களச் சோதனைகளை நடத்தியதாக அவர் விளக்கினார்.
இந்தச் சோதனைகளில் இ20 எரிபொருள் பழைய வாகனங்கள் உட்பட வாகனங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும், வாகனத்தை ஓட்டும் தன்மை, வாகனம் ஸ்டார்ட் ஆகும் தன்மை அல்லது பொருள் இணக்கத்தன்மை போன்ற செயல்திறன் அளவுகோல்களிலும் பெரிய பிரச்சனைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமைச்சர் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களில் மைலேஜ் வேறுபடுவது எரிபொருள் வகையைத் தாண்டி, வாகனத்தை ஓட்டும் விதம், பராமரிப்பு, வாகனத்தின் நிலை போன்ற பல காரணிகளால் ஏற்படுகின்றன என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். பெட்ரோலில் எத்தனால் கலப்பு ஆனது வெளிநாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தனிப்பட்ட போக்குவரத்து என்பது ஒரு கனவாகும். எனவே, "அறிவார்ந்த, நியாயமான மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த" மாற்றம் தேவை என்று கமல் ஹாசன் வலியுறுத்தினார். பின்னர், மாநிலங்களவையின் கேள்வி எண் 2081ஆக அமைந்த, டிசம்பர் 18ஆம் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எழுப்பிய கேள்வியில், இந்தியாவின் தோரியம் (Thorium) உலோக பயன்பாடு குறித்துப் பேசினார்.
விக்ஸித் பாரத் (Viksit Bharat) (2047ஆம் ஆண்டிற்குள், அதாவது நாட்டின் 100வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் மத்திய அரசின் திட்டம்) நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் கீழ், நாட்டின் அணுசக்தி திறனை தற்போதுள்ள 8.8 ஜிகா வாட்-இல் இருந்து 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகா வாட்-ஆக உயர்த்துவதற்கான அரசின் விரிவான திட்டம் மற்றும் காலக்கெடுவைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு நாட்டிற்கும் அணுசக்தி திட்டம் அவசியமான ஒன்றாகும். இதனை புரிந்துக் கொண்டதன் விளைவாகவே, கல்பாக்கத்தில் இரண்டு கூடுதல் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்கள் (FBR) கட்டுமானத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இதற்காக புதிய உலோகங்கள் பயன்பாட்டை ஆராய்ச்சி செய்வதும், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதும் முக்கியமாகும்.
இதனாலேயே, மாநிலங்களவை உறுப்பினர் கமலஹாசன் தோரியம் குறித்து கேள்வியெழுப்பி உள்ளார். தோரியம் என்பது பலவீன கதிரியக்கத்தன்மை கொண்ட, வெள்ளி மற்றும் வெள்ளை நிறம் கலந்த உலோகம் ஆகும். இந்தியாவில் செழிப்பாக உள்ளதாக கூறப்படும் தோரியம் ஒரு வளமான பொருள் ஆகும். அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக, மக்கள் மத்தியில் சிறிது அச்சம் நிலவும் நிலையில் நாடாளுமன்றத்தில் கமலஹாசனின் இந்தக் கேள்விகள் நுகர்வோர் கவலைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தன.
அதேபோல், பெரியதாக கண்டுக்கொள்ளப்படாத இ20 பெட்ரோல் குறித்தும் நாடு தழுவிய அளவில் கவனம் பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் இவர் கேள்வியெழுப்பி இருப்பது பாராட்டத்தக்கது ஆகும். இருப்பினும், மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுவது போல் இ20 பெட்ரோலால் உண்மையில் வாகனங்களில் பிரச்சனை ஏற்படுகிறதா அல்லது இது எல்லாம் ஒரு மாய பிம்பமா என்பது தெளிவுப்படுத்த முடியாததாகவே உள்ளது. ஏனெனில், ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களது வாகனங்களை இ20 பெட்ரோலுக்கு ஏற்ப அப்கிரேட் செய்துவிட்டதாக தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









