இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய சாதனை!! 24 வயது இளைஞரின் பெயர் இந்திய சாதனைகள் புத்தகத்தில்...
நடிகர் விஜய்யின் கில்லி படத்தை பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் பெற்றோருக்கு தெரியாமல் விஜய் நிறைய பதக்கங்களையும், கோப்பைகளையும் கபடி போட்டியில் குவித்து வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் அது தெரியவரும் போது அது உணர்ச்சிவசமான காட்சியாக இருக்கும். அதுபோன்று, கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு சென்று, ஒரு மிக பெரிய சாதனையை புரிந்துள்ளார். யார் அந்த இளைஞர்? அப்படி அவர் என்ன சாதனையை செய்துள்ளார்? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெங்களூர் மாநகரின் உல்சூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான மெல்வின் ஆண்டோ (Melvin Anto). மற்ற இளைஞர்களை போலவே நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சுற்றுவது மற்றும் யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவிடுவது என மெல்வின் ஆண்டோவின் அன்றாட வாழ்க்கை சென்றுள்ளது. இவரது அம்மாவின் பெயர் வசந்தா ராணி.

மெல்வின் ஆண்டோ சமீபத்தில் அருகில் உள்ள மலை பகுதிக்கு நண்பர்களுடன் செல்வதாக தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால், சில நாட்கள் கழித்து வசந்தா ராணிக்கு அவரது மகனை பற்றி ஆச்சிரியமான விஷயம் தெரியவந்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, மெல்வின் ஆண்டோ தேசிய சாதனையை புரிந்து அதற்கான பதக்கத்தை பெற்றிருப்பதுதான்.
ஏற்கனவே கூறியதுபோல், யூடியூப்பரான மெல்வின் ஆண்டோ அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் புதியதாக ஒரு வீடியோவை பதிவிடும் முயற்சியாக கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரை தனியாக செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தேர்வு செய்தது, கார் பயணமோ அல்லது இரயில் பயணமோ கிடையாது, மோட்டார்சைக்கிள் பயணம் ஆகும்.
பைக்கில் நிறைய பேர் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாக்குமரியில் இருந்து வடமுனையில் உள்ள காஷ்மீர் வரை சென்றுள்ளனர். ஒரு சிலர், இன்னும் மேலாக லடாக் வரையில் கூட சென்றுள்ளனர். ஆனால், மெல்வின் ஆண்டோவின் இந்த பயணம் நாடு தழுவிய அளவிற்கு போற்றப்பட்டதற்கு காரணம், இந்த மோட்டார்சைக்கிள் பயணத்தை மெல்வின் ஆண்டோ வெறும் 60 மணிநேரத்தில், அதாவது 2.5 நாட்களில் முடித்துள்ளார்.
இந்த பயணத்தை மெல்வின் ஆண்டோ தனியாக தான் மேற்கொண்டார் என்றாலும், பெங்களூரில் இருந்தவாறு மெல்வினின் நண்பர்கள் அவரது இந்த சாதனை பயணத்திற்கு உதவி புரிந்துள்ளனர். இந்த உலகத்திலேயே வித்தியாசமான நாடு நம் இந்தியா எனலாம். ஏனெனில், இங்கு பல விதமான ஜாதி, மதங்கள் கலந்திருப்பது மட்டுமின்றி, கால வெப்பநிலைகளும் கலந்துள்ளன.
அதாவது, ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் உங்களால் தாங்கவே முடியாத வெப்பத்தை உணர முடியும். அப்படியே சில நூறு கிமீ தொலைவிற்கு சென்றால், இமயமலை தொடரின் குளிர் உங்களை உறைய வைத்துவிடும். இந்த அத்தனை கால வெப்பநிலையையும் சமாளித்து கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீரை மெல்வின் ஆண்டோ பைக்கில் வேகமாக அடைந்துள்ளார்.
மெல்வின் ஆண்டோவின் சாதனை குறித்து இந்திய சாதனைகள் புத்தகத்தின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படி, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அதிகாலை 5:36 மணியளவில் கன்னியாக்குமரியில் இருந்து மெல்வின் தனது பைக் பயணத்தை துவங்கியுள்ளார். ஜம்மூ & காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரை ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5:09 மணியளவில் அடைந்துள்ளார். 59 மணிநேரம் 33 நிமிடங்களில் சுமார் 3,613கிமீ தொலைவிற்கு இவர் பைக் ஓட்டியுள்ளார்.
இந்த சாதனையை மே 16ஆம் தேதி இந்திய சாதனைகள் புத்தகம் அங்கீகரித்துள்ளது. இந்த பயணத்தில் மெல்வின் ஆண்டோ பயன்படுத்தியது கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என்கிற எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் தற்சமயம் இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.81 லட்சமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்குள் தான் செல்கிறோம் என்றாலும், கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் செல்வதற்குள் சில பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியை வாங்க வேண்டியிருக்கும். இதனால்தான், மெல்வினுக்கு கூடுதலாக 12 மணிநேரங்கள் தேவைப்பட்டுள்ளது. இல்லையென்றால், 48 மணிநேரத்திலேயே, அதாவது 2 நாட்களிலேயே இந்த சாதனையை அவர் முடித்திருப்பார். காஷ்மீரில் பனி படர்ந்த சாலைக்கு ஏற்ப ஃப்ளாட் டயர்களை பைக்கில் பொருத்துவதற்கும் மெல்வின் ஆண்டோவிற்கு கொஞ்சம் தாமதமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








