கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக பைக் பேரணி!! பெங்களூர் பைக் ரைடர்களால் ஸ்தம்பித்தது!
2023 கார்கில் போரில் வெற்றியை கொண்டாடும் விதமாக பெங்களூரில் இராணுவ வீரர்கள் உடன் இணைந்து பல்வேறு கிளப்களை சேர்ந்த பைக் ரைடர்கள் பைக் ஓட்டி தங்களது தேசப்பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இராணுவ வீரர்கள் மற்றும் இதர வீரர்கள் உடன் இணைந்து பைக் ஓட்ட, பலர் ஆர்வமாக தங்களது பெயர்களை கிளப்கள் வாயிலாக பதிவு செய்து கொண்டனர்.
நம் இந்தியாவில் நாட்டை காக்கும் இராணுவ வீரர்களுக்கு எப்போதுமே ஓர் தனி மரியாதை உண்டு. இதனை நிரூப்பிக்கும் வகையில் அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நாட்டின் பல இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஜூலை 30) பெங்களூரில் 'ரைடு வித் சோல்சர்ஸ்' என்ற பெயரில் ஓர் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை, பெண் பைக் ரைடர்கள் அமைப்பான 'ஷீ ஃபார் சொசைட்டி' உடன் இணைந்து ஷேத்ரா செயின் ஆஃப் லக்சரி ரெசார்ட்ஸின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீ ஹரி ராஜு, CKPC-இன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே.ஜே புருஷோதம் மற்றும் அகிலா கர்நாடக முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் முன்னின்று நடத்தி கொடுத்துள்ளது.
1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கார்கில் போரில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்களை தடுத்து இந்திய இராணுவம் வெற்றி கண்டது. இந்த போரில் இந்திய இராணுவ வீரர்கள் பலர் தங்களது உயிரை நாட்டுக்காக வீர மரணம் அடைந்தனர். கார்கில் போரில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாகவும், போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுக்கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தினத்தை'கார்கில் விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம்.

இந்த ஆண்டிலும், கார்கில் விஜய் திவாஸுக்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்களும், வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தப்பட்டன. அந்த வகையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இந்த பைக் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பைக் பேரணியில் இராணுவ வீரர்கள் உள்பட, டோர்னாடோஸ் பிரிவு வீரர்கள், பி.எஸ்.எஃப் வீரர்கள், 300 முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் 300 வீர்நாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை கர்நாடக மாநில கவர்னர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரியா கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினர். அத்துடன், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் நவீன் நாகப்பா மற்றும் கோல்.ஓம்மன் ஜகோப் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஜூலை 30ஆம் தேதி காலை 6 மணியளவில் மனேக்ஷா பரேட் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி துவங்கியது.

அதன் பின்னர், காலை 7.30 மணியளவில் பிரிகாடியர் ராஜேஷ் பனிகர் அவர்களால் கொடியசைத்து பைக் பேரணி துவங்கி வைக்கப்பட்டது. மனேக்ஷா பரேட் மைதானத்தில் துவங்கிய இந்த பைக் பேரணி 11 கிமீ தொலைவில் விஜய்நகர் என்ற பகுதியில் உள்ள பிஜிஎஸ் மைதானத்தில் நிறைவுற்றது. இந்த பேரணியில் பங்கேற்பாளர்கள் அதிக பேரை பங்கேற்க செய்த முதல் 5 கிளப்களுக்கு கர்நாடகா கவர்னர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
பேரணியை முடித்த கொண்ட பின் ரைடர்கள் ஒன்று இணைந்து சுமார் 1000 அடி நீளமுள்ள பிரம்மாண்ட இந்திய கொடியை உருவாக்கினர். அதன் பின்னர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் பிஜிஎஸ் மைதானத்தில் நடத்தப்பட்டன. இதன்படி, டிரம்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் அடிக்கப்பட்ட மேளங்கள் அந்த பகுதியையே அதிர வைத்தன.

அதன்பின், அமர் ஜவான் சிலைக்கு பெரிய அளவிலான மாலை அணிவிக்கும் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்கள் தங்களது மனமார்ந்த மரியாதையை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300 வீர்நாரிகளின் துணிச்சலும், நெகிழ்ச்சியும் கவுரவிக்கப்பட்டன. டோர்னாடோஸ் குழுவினரின் பைக் ஸ்டண்ட் சாகசங்கள் கூடி இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் பிரம்மிப்படைய செய்தது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கார்கில் போரின் வெற்றியை கொண்டாடுவதற்கு மட்டுமின்றி, மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காகவுமே. இந்த நிகழ்ச்சியின் மூலம் கார்கில் போரை பற்றி இந்த கால இளம் தலைமுறையினர் தெரிந்து கொண்டு இருப்பர். மேலும், முன்னாள் & இந்நாள் இராணுவ வீரர்களை நேரில் பார்த்ததன் மூலம் அவர்களது ஒழுக்கத்தையும் கண்கூடாக கண்டிருப்பர் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









