ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார் டிரைவர்... டாக்டர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு நிலைகுலைந்த உறவினர்கள்...
ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் கார் ஓட்டுனர் செய்த காரியத்தால், நோயாளியின் உறவினர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

இந்தியாவில் அவசரமாக சென்றாக வேண்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போக்குவரத்து நெரிசல் என்ற மிகப்பெரிய பிரச்னைக்கு மத்தியிலும், நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வருகின்றனர். இது போதாதென்று, பொறுப்பு இல்லாத ஒரு சிலரையும் அவர்கள் சமாளித்தாக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

அதாவது ஒரு சிலர் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவதே கிடையாது. இதன் காரணமாக ஏற்படும் ஒவ்வொரு வினாடி தாமதமும், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆம்புலன்ஸ்களுக்கு உடனடியாக வழி விட வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னமும் கூட ஒரு சிலர் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மைசூரில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் இதற்கு உதாரணம். கர்நாடக மாநிலம் மைசூரில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 85 வயது முதியவர் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் அவசர அவசரமாக மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆனால் கார் ஓட்டுனர் ஒருவர், அந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடவில்லை. இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால், அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்காக அந்த கார் ஓட்டுனருக்கு 11,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற கார் ஓட்டுனர்தான் மனிதாபிமானமற்ற முறையில் ஆம்புலன்ஸ்க்கு வழி விட மறுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத காரணத்திற்காக அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான முறையில் காரை ஓட்டியதற்காக கூடுதலாக 1,000 ரூபாய் சேர்த்து, மொத்தம் 11,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மைசூர் நகர காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) சந்தேஷ் குமார் இத்தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மோட்டார் வாகன சட்டம் (திருத்தப்பட்டது), 2019-ன் கீழ் கார் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். இச்சம்பவத்தில் என்ன நடந்தது? என்பது தொடர்பாகவும், கார் ஓட்டுனர் ஜெயந்த் எப்படி மோசமாக நடந்து கொண்டார்? என்பது குறித்தும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தன்று கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் ஆச்சார்யா (85) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவரை ஆம்புலன்ஸ் மூலம் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிஷோர் சரியாக இரவு 8.30 மணியளவில், மைசூரில் ஹன்சூர் சாலையில் உள்ள பெலவாடி சந்திப்பை வந்தடைந்தார்.

அப்போது ஜெயந்த் ஓட்டி வந்த கார், சாலையை அடைத்தபடி நின்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் சைரன் ஒலித்து கொண்டிருந்தது. அத்துடன் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிஷோர் தொடர்ச்சியாக ஹாரனை ஒலித்தார். இருந்தாலும் ஜெயந்த் வழி விட மறுத்துள்ளார். ஜெயந்த் சாலையை அடைத்து, காரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

எனவே ஆம்புலன்ஸை விட்டு கிழே இறங்கி, வழி விடும்படி ஜெயந்த்திடம் மன்றாடும் சூழ்நிலைக்கு கிஷோர் தள்ளப்பட்டார். ஆனால் அப்போதும் கூட ஜெயந்த் வழி விடவில்லை. இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காததால், நோயாளியின் உறவினர்கள் கீழே வந்து வழி விடும்படி ஜெயந்த்திடம் மன்றாடினர். அப்போதும் கூட ஜெயந்த் மனம் இறங்கவில்லை.

இதனால் சுமார் 15 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் ஒரு வழியாக மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில், சந்திரசேகர் ஆச்சார்யா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் ஏற்பட்ட காலதாமதம் அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிரின் மதிப்பை அறியாமல் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுப்பவர்கள் மீது சட்ட ரீதியில் இன்னும் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ்களுக்கு நாம் அனைவரும் வழி விட வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








