காக்கா தோஷம்... புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் பானட்டில் காக்கா ஒன்று அமர்ந்து கொண்டு நகராமல் இருந்தது பரபரப்பான செய்தியாக வெளிவந்தது.
கடந்த 2ந் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், தற்போது முதல்வர் சித்தராமையாவுக்கு புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் வாங்கப்பட்டிருக்கிறது.
காக்கா தோஷம் ஏற்பட்டுள்ளதாக கருதி, மூட நம்பிக்கையின் பேரிலேயே அவர் புதிய கார் வாங்கியிருப்பதாக கர்நாடாக அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

காரை விடாத காகம்
கடந்த 2ந் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ அரசு இல்லமான கிருஷ்ணாவில் அவர் பயன்படுத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வந்த காகம் ஒன்று அந்த காரின் பானட்டில் அமர்ந்து கொண்டு நகராமல் அழிச்சாட்டியம் செய்தது. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கழித்து அந்த காகத்தை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

காக்கா தோஷம்
காகம் சனி பகவானின் வாகனமாக கருதப்படுகிறது. எனவே, சனி பிடித்துவிடும் என்ற அச்சத்தாலும், அபசகுனமாக கருதிய முதல்வர் சித்தராமையா அந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மூட நம்பிக்கை
மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் முதல்வர் சித்தராமையா, காக்கா தோஷத்தை காரணமாகவே வைத்தே புதிய காரை வாங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

ஆனால்...
ஆனால், அரசு தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் 2 லட்சத்திற்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் ஓடிவிட்டதாகவும், அடிக்கடி பழுது ஏற்படுவதாலேயே புதிய கார் வாங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதிப்பு
பழைய கார் சர்வீஸ் சென்றிருப்பதாகவும் அதற்கு மாற்றாகவே புதிய கார் வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ரூ.35 லட்சம் மதிப்பில் கர்நாடக அரசு வாங்கியிருக்கிறது.

புதிய கார்
ஏற்கனவே அவர் பயன்படுத்தி வந்த KA-01 G-5734 என்ற பதிவெண் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் அரசு புனரமைப்பு மேலாண்மை துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் KA-01 GA - 2016 என்ற பதிவெண் கொண்டதாக வாங்கப்பட்டிருக்கிறது.
Image Credit: Coastaldigest

சிறப்பம்சங்கள்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவிகளில் மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்தை கொண்டது டொயோட்டா ஃபார்ச்சூனர். இதன் தோரணையும், சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் சிறப்பான இடவசதியும் அரசியல்வாதிகளை இந்த கார் வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொழில்நுட்ப விபரம்
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வழங்கும்.

இதர அம்சங்கள்
7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டது. இந்த காரில் 296 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ஸ்பேஸ் இடவசதி உள்ளது. இதுதவிர, பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








