ஒரே நாளில் மொத்தமா மாத்தீட்டாங்க... கிராம மக்களுக்காக அரசு பஸ்களில் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?
கிராம மக்களுக்காக அரசு பஸ்களில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் வட கிழக்கு பிரிவு, தற்போது பேருந்துகளை கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இந்த பேருந்துகள் சேவையாற்றவுள்ளன. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''மருத்துவமனைகள் அல்லது தடுப்பூசி மையங்கள் இல்லாத சிறிய கிராமங்களுக்காக இந்த பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாக 2 பேருந்துகளை, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் வட கிழக்கு பிரிவு, தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளது.

மக்கள் பதிவு செய்வதற்கும், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கும், அதன்பின் ஓய்வு எடுப்பதற்கும் தனித்தனி பகுதிகள் இந்த பேருந்துகளில் உள்ளன. தற்போதைய நிலையில் 2 பேருந்துகளை மட்டும்தான் தடுப்பூசி மையங்களாக மாற்றியுள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் நிறைய பேருந்துகளை இப்படி தடுப்பூசி மையங்களாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

கோவிட் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். இதற்கு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். போக்குவரத்து கழகத்தில் ஏராளமான ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்னும் பலர் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்'' என்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைத்து மாநிலங்களும் தற்போது இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றன. தற்போது தடுப்பூசியின் முக்கியத்துவம் பலருக்கும் புரிந்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்துவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மிக விரைவாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு முன்பாக நிறைய பேருக்கு தடுப்பூசி செலுத்தி விட்டால், பாதிப்புகளை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தற்போது மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இதற்காக சிறப்பு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், தடுப்பூசி செலுத்தி கொள்வோரில் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்கோ நகர மேயர் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களுக்கு, பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications