ஓலா டாக்ஸிக்கு 6 மாதம் தடைவிதித்த கர்நாடகா: காரணம் தெரிஞ்சிக்கனுமா...?
ஓலா நிறுவனம் பைக் டாக்ஸி சேவையை சட்ட விரேதமாக கர்நாடகாவில் செய்துவந்ததால், அந்த நிறுவனம் கால் டாக்ஸி சேவையை இயக்க ஆறு மாதங்களுக்கு தடைவிதித்து கர்நாடகா உத்தரவிட்டுள்ளது.

கால் டாக்ஸி சேவையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொடிகட்டி பறந்து வரும் ஓலா நிறுவனத்திற்கு, கர்நாடக அரசு ஆறு மாதங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம், சட்டவிரோதமாக பைக் டாக்ஸி சேவையை ஓலா நிறுவனம் கர்நாடகவில் செய்து, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓலா, ஊபர், மேரு மற்றும் ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கால் டாக்ஸி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் தங்களின் சேவையை செய்துவருகின்றன. இந்த சேவையின் மூலம் பயணிகள் விரும்பிய இடத்திற்கு, வாகனங்களைப் புக் செய்து குறுகிய காலகட்டத்தில் சென்று வருகின்றனர். இந்த சேவையை ஆன்லைன் அல்லது மொபைல் போன் ஆப்மூலம், தேவைக்கேற்ப வாகனங்களைப் புக் செய்துக்கொள்ளலாம்.

முன்னதாக இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக டாக்ஸி சேவையில் பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழும்ப ஆரம்பித்துள்ளது.
கார்கள் செல்ல முடியாத குறுகிய சாலைக்குள் பைக்குகள் செல்வதாலும், காரைக் காட்டிலும் குறைவான கட்டணத்தை விதிப்பதாலும் இந்த சேவையைப் பலரும் பன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன்படி, பைக் டாக்ஸி சேவையில், முதல் மூன்று கிலோ மீட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது, கார் மற்றும் ஆட்டோவைக் காட்டிலும் சற்று குறைவு. இதன்காரணமாக, கார் மற்றும் ஆட்டோவின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருவதாக கார் ஓட்டுநர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர்.

தற்போது தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக பட்டதாரிகள் உட்பட சில இளைஞர்கள் இந்த பைக் டாக்ஸி சேவையில் பணி புரிந்து சொற்பமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அவ்வாறு, பைக் டாக்ஸி சேவையில், சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டேக்ஸியாக இயக்குவது குற்றமாகும். மேலும், இருசக்கர வாகனங்களைப் பொதுசேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, பொதுசேவையில் ஈடுபடும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

அதேபோல், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு இருக்க வேண்டும். மேலும், தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகள் இதில் உள்ளன. ஆனால், இதில் எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல் தனியார் வாகனங்களை பொதுபயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
ஆகையால், விதியைமீறி இயக்கப்படும் பைக் டாக்ஸிகளை பறிமுதல் செய்யும் முயற்சியில் சென்னை ஆர்டிஓ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, இதுவரை சென்னையில் மட்டும் 43க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் இதுபோன்று நடவடிக்கையில் அம்மாநில போக்குவரத்துத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, விதிமுறைகளை மீறி பைக் டாக்ஸி சேவையை இயக்கியதாகக்கூறி, ஓலா நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவைக்கு கர்நாடக மாநிலம் ஆறு மாதங்களுக்கு தடை வித்து உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது வருகின்ற 2021ம் ஆண்டு ஜுன் மாதம் 20ம் தேதி வரை நீடிக்கும். கர்நாடக அரசின் இந்த உத்தரவால் ஓலா நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 8 கோடி வருவாயை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க உள்ளனர்.

கர்நாடாகவின் இந்த உத்தரவினால் ஓலாவின் கால் டாக்ஸி சேவை கடந்த நான்கு நாட்களாக முடங்கியுள்ளது. இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின்மீது வழங்கப்பட்டுள்ள இந்த முடக்கத்திற்கு, நீதிமன்றத்தை நாட விருப்பதாக ஓலா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஓலாவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு ஊபர் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. இந்தியாவில் ஓலாவுக்கு அடுத்து, கால் டாக்ஸி சேவையில் மிகவும் பிரபலமாக இருப்பது ஊபர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








