இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த பக்தர்... காரணத்தை கேட்டால் அசந்திருவீங்க!
பக்தர் ஒருவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் வெப்பமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு, மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். இதில், ஒருவர் செய்துள்ள காரியம் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆம், அவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளார். தனது காரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார். அவரது இந்த செயல்பாடு குறித்து சமூக வலை தளங்களில் பலரும் ஆர்வமாக விவாதித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர்தான் இந்த விவாதங்களுக்கு காரணம்.

திருமலை கோயிலுக்கு தரிசனத்திற்காக அவர் வந்திருந்தபோது, அவரது கார் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்டிருந்தது. அங்கு பார்க்கிங் செய்யப்பட்டிருந்த அந்த காரை மற்ற பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளதன் மூலம் காரை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிமையாக எதிர்கொள்ளலாம் என்பதும் அவரது கருத்து. தற்போது மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்டிருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் கார் ஆகும். அந்த காரை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டோ எடுத்தனர். அத்துடன் அந்த காருடன் பலர் செல்பியும் எடுத்து கொண்டனர்.

அந்த புகைப்படங்களை பலர் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து சமயம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே பலர் இப்படி மாட்டு சாணத்தால் தங்களுடைய காரை கோட்டிங் செய்துள்ளனர் என்பதும், இது முதல் முறை கிடையாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் அகமதாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார். இதன் மூலம் ஏசி இல்லாமலேயே கார் குளிர்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் கூட இப்படி மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்திருந்தார்.

அவர் தனது மகளின் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது டொயோட்டா இன்னோவா கார் ஆகும். மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட அந்த காரை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பொதுவாக வெளியில் உள்ள வெப்ப நிலையை காட்டிலும் காரின் கேபினுக்குள் வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும். அதுவும் கோடை காலம் என்றால், ஏசி இல்லாமல் காருக்குள் உட்காரவே முடியாது. எனவே வெப்பத்தை எதிர்கொள்வதற்காக மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்வதாக, சம்பந்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








