நாட்ல இவ்ளோ பிரச்சனை இருக்கும்போது 30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியது அவரா! கோவத்துல மக்கள் கழுவி ஊத்தறாங்க!
இந்தியாவில் ஏராளமான தனி நபர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் (Helicopters) வைத்துள்ளனர். குறிப்பாக தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றவர்களிடம்தான், அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் உள்ளன. தொழில் அதிபர்களோ அல்லது திரையுலக நட்சத்திரங்களோ ஹெலிகாப்டர்களை சொந்தமாக வாங்கினால், அது எவ்விதமான சர்ச்சைகளையும் பெரிதாக ஏற்படுத்தாது.
ஆனால் அரசியல்வாதிகள் சொந்தமாக ஹெலிகாப்டர்களை வாங்கினால், அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி விடும். அப்படியான சர்ச்சை ஒன்றில், அரசியல்வாதி ஒருவர் தற்போது சிக்கி உள்ளார். இத்தனைக்கும் தலைநகர் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள சூழலில் அவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அமைச்சராக இருந்து வரும் சதீஷ் ஜர்கிஹோலி (Satish Jarkiholi) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவர் கர்நாடக மாநில அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அவரிடம் ஏற்கனவே ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
அப்போது மாநிலம் முழுக்க தனது ஹெலிகாப்டரில் பறந்து சென்று சதீஷ் ஜர்கிஹோலி பிரச்சாரம் செய்தார். இந்த சூழலில்தான், தற்போது இரண்டாவதாக ஒரு ஹெலிகாப்டரை அவர் வாங்கியுள்ளார். பெங்களூரில் உள்ள ஜக்குர் ஏரோட்ரோமில், தனது புதிய ஹெலிகாப்டரை, அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அந்த தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி வாங்கியுள்ள ஹெலிகாப்டர் கூடிய விரைவில் பறப்பதற்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் வரும் 2028ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கு உதவும் என்ற நோக்கத்தில்தான், அவர் இரண்டாவது ஹெலிகாப்டரை வாங்கியிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் மதிப்பு 30 கோடி ரூபாய் என்று கார்டாக் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரட்டை இன்ஜின்களை கொண்ட அகுஸ்டா ஏடபிள்யூ109 (Augusta AW109) ஹெலிகாப்டர் ஆகும்.
அட்வான்ஸ்டு வயர்லெஸ் கம்யூனிகேஸன் சிஸ்டம் மற்றும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம், இந்த ஹெலிகாப்டர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஹெலிகாப்டரில் 10 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக மணிக்கு 324 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய கூடியது.
ஆனால் அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி ஹெலிகாப்டர் வாங்கியிருப்பது, கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கூட, சாலைகள் மோசமான நிலையில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் அதை எல்லாம் சரி செய்யாமல், ஹெலிகாப்டர் வாங்கி கொண்டுள்ளார் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி ஹெலிகாப்டர் வாங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் தரமான சாலைகள் போன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டு அவர் ஹெலிகாப்டர் வாங்கினால் எந்த சர்ச்சையும் எழாது. அதை விடுத்து விட்டு, மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல், அவர் ஹெலிகாப்டர் வாங்குவதால்தான் சர்ச்சைகள் எழுகின்றன.


Click it and Unblock the Notifications








