வால்வோ சொகுசு காரில் பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பிய பங்க் ஊழியர்!
கர்நாடக எம்எல்ஏ.,ஒருவரின் வால்வோ சொகுசு காரில் பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் வாங்கி இரண்டே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூர் வடக்குத் தொகுதி எம்எல்ஏ,வாக இருப்பவர் மொஹியூதீன் பாவா. கடந்த சனிக்கிழமை புத்தம் புதிய வால்வோ எக்ஸ்சி90 டி9 சொகுசு கார் மாடலை வாங்கி இருக்கிறார். இந்த புதிய வால்வோ காரை முதல் இந்திய வாடிக்கையாளரும் இவர்தான்.

இந்த நிலையில், நேற்று மொஹியூதீன் பாவாவின் மகன் அந்த வால்வோ காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக மங்களூரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம் பெட்ரோல் நிரப்புமாறு கூறிவிட்டு, பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்க்கும்போது, அந்த ஊழியர் தவறுதலாக பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பிவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால், மொஹியூதீன் பாவாவின் மகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து தனது தந்தையிடமும் தகவல் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த விஷயம் குறித்து எம்எல்ஏ மொஹியூதீன் பத்திரிக்கை ஒன்றிடம் தகவல்களை தெரிவித்துள்ளார். "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. மனித தவறு இயற்கையானது. எந்திரத்தைவிட மனிதர்களை மதிக்கிறோம். இது தவறுதலாக நிகழ்ந்துவிட்டது.

பெங்களூரில் உள்ள வால்வோ ஷோரூமிலிருந்துதான் இந்த கார் வாங்கி இருக்கிறோம். காரில் உள்ள டீசலை எடுத்துவிட்டு, பழுது நீக்குவதற்கு காரை பெங்களூர் வேறு வாகனத்தின் மூலமாக எடுத்து வர சொல்லி இருக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தவறுக்கு பொறுப்பேற்று பெட்ரோல் நிலைய நிர்வாகம் காரை பெங்களூர் எடுத்துச் சென்று எரிபொருளை வெளியில் எடுத்து சரி செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாம். கார் வாங்கி இரண்டே நாட்களில் இதுபோன்று நடந்தது பெரும் துரதிருஷ்டவசமானது.

மங்களூர் எம்எல்ஏ மொஹியூதீன் பாவா என்ற பெயரில் சுரங்க நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமைதான் இந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 டி9 காரை ரூ.1.65 கோடி விலை மதிப்பில் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில், இதுபோன்று எரிபொருளை மாற்றி நிரப்பும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது சகஜமாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கான விஷயங்களை தொடர்ந்து காணலாம். பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்போது ஊழியரிடம் சொல்லிவிட்டு, பணம் செலுத்துவது அல்லது வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிருங்கள்.

காரில் தவறுதலாக சரியான எரிபொருள் நிரப்பும் பட்சத்தில், காரை ஸ்டார்ட் செய்வதை தவிர்க்கவும். வேறு வாகனம் மூலமாக டோ செய்தோ அல்லது அதற்கான டிரக்குகளில் வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று எரிபொருளை முழுவதுமாக வெளியேற்றுவது அவசியம்.

ஒருவேளை கார் எஞ்சின் ஸ்டார்ட் செய்துவிட்டால், எஞ்சினில் அதிக பிரச்னை ஏற்படும். ரிப்பேர் செலவு மிக அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். எனவே, காரில் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது மிக கவனமாக இருக்கவும்.


Click it and Unblock the Notifications








