இன்னோவோ கிறிஸ்டா காரை வைத்து பேரிகேடுகளை உடைத்த பாஜக எம்.பி... போக்குவரத்து போலீசார் வழக்கு..!!
இன்னோவோ கிறிஸ்டா காரில் பேரிகேடுகளை உடைத்த பாஜக எம்.பி... போக்குவரத்து போலீசார் வழக்கு..!!
பொதுமக்களில் பலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால், அதற்கான உரிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்வது சரியான ஒன்று தான்.

ஒரு பொதுஜனம் மீது பாயும் இந்த நடவடிக்கை, அரசியல் தலைவர்களுக்கும், ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கும் எடுபடுமா என்பது சந்தேகமே.

நிலைமை இப்படியிருக்க, கர்நாடகாவின் போக்குவரத்து காவலரிடம் பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாகாவில் உள்ள மைசூரு நகரத்தின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் பிரதாப் சிம்ஹா.
மைசூர் ஹன்ஸூர் பகுதியில் நடைபெற்ற அனுமான் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.

அப்போது அந்த பகுதிகளில் அனுமான் ஜெயந்தி விழாவிற்கு வேண்டி சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஹன்ஸூருக்கு வந்த பிரதாப் சிம்ஹா, பிலிகெரே என்ற இடத்தில் போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதை அறிந்து காரை விட்டு இறங்கி வந்தவர், அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எம்.பி பிரதாப் சிம்ஹாவிற்கு, காவல்துறைக்கு நடந்த தள்ளுமுள்ளு வீடியோ:
போக்குவரத்து விதிகளை பற்றி காவலர்கள் பிரதாப் சிம்ஹாவிடம் எடுத்து கூறினர். அதை கேட்க மறுத்த அவர், தனது இன்னோவோ கிறிஸ்டா காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை தானே ஓட்டினார்.

போலீசார் பலமுறை தடுத்தும், கேட்காத அவர், தடுப்பரண்களை உடைத்து தள்ளி, காவலர்கள் மீது காரை ஏற்றி விடும் அளவிற்கு தனது இன்னோவோ கிறிஸ்டாவில் ஹன்ஸூரை நோக்கி பறந்தார்.

பிலிகெரே போக்குவரத்து காவலர்களுக்கும் மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவிற்கும் இடையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்கள் பதிவு செய்தனர்.

மேலும் எம்.பி பிரதாப் சிம்ஹா மீது ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை ஓட்டியது, போலீசாரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் கர்நாடகா காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.

அதன்படி பிரிவு 353 (அரசாங்க ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குவது அல்லது கிரிமனல் குற்றம் செய்வது), 332( அரசாங்க ஊழியர் மீது பழி சுமத்த தன்னை தானே துன்புறுத்திக்கொள்வது) மற்றும் 279 (பொறுப்பின்றி வாகனங்களை அலட்சியமாக கையாளவது) ஆகியவற்றின் கீழ் எம்.பி பிரதாப் சிம்ஹா மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

எம். பி மட்டுமின்றி பாஜக-வின் இளைஞர் பிரிவு அமைப்பான யுவா மோர்ச்சாவிலும் பிரதாப் சிம்ஹா தலைமை பொறுப்பில் உள்ளார்.
கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்றே எம்.பி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்ட எம்.பி பிரதாப் சிம்ஹா, போலீசார் தன் மீது வேண்டுமென்றே வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகள் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இதில் பொதுஜனம், எம்.பி, மந்திரி, ஆட்சியாளர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.

காவல்துறை சொல்லும் கட்டுப்பாட்டில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும். அதை மீறினால் வழக்கு பாய்வது சட்டப்படி குற்றமாகாது.
மேலும் இந்த சம்பவங்களின் போது பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க காரணமாக இருந்தால், வழக்கு மேலும் கடுமையாகும்.

ஒவ்வொருவருக்கும் வாகனம் ஓட்டும் முறை மாறும். அதை ஒழுங்கப்படுத்துவதற்கு தான் சட்டப்படியான அம்சங்கள் தேவைப்படுகிறது.
பாதுகாப்பான டிரைவிங் தான் சாலை விதிகளில் அடிப்படை. உங்களது வாகன பயன்பாடு மற்றவருக்கு ஆபத்தாக அமையந்திடக்கூடாது என்பது அடுத்த விதி.

மைசூருவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணம் எம்.பி பிரதாப் சிம்ஹா தான். அவர் செய்த தவறு தான் இத்தனை பரபரப்பிற்கு காரணம்.

ஒரு மக்களவை உறுப்பினராக இருப்பவர், பொதுசொத்திற்கு தீங்கு விளைவிப்பது போல் நடந்துக்கொள்வது மற்றும் ஆபத்தை தரும் வகையில் வாகனம் ஓட்டுவது ஏற்புடையது அல்ல.

போக்குவரத்து விதிகளை மீறும் போது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டால், அதற்கு நாம் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
மேலும் உங்கள் மீது தவறு என்றால், அப்படி ஏற்பட என்ன காரணம் என்பதை போலீசாருக்கு முடிந்தவரையில் தெளிவாக விளக்க முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








