மாருதி காரில் இருந்து திடீரென வெளியே வந்து விழுந்த பயணி... எப்படி நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ
மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில் இருந்து பயணி ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அவ்வளவு பிரபலம் கிடையாது. ஆஃப் ரோடிங் அல்லது ட்ராக் ரேஸிங் என எதுவாயினும், ஒரு சிலர் மட்டுமே மோட்டார்ஸ்போர்ட்ஸ்களில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் அடிக்கடி ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ளக்கூடிய, ஒரு சில குழுக்களை ஒரு சில நகரங்களில் மட்டும் பார்க்க முடியும்.

ஆஃப் ரோடு சாகச பயண ஆர்வலர்கள் தங்களுக்குள் சந்தித்து கொண்டு, பயணம் செய்கின்றனர். இப்படி ஒரு ஆஃப் ரோடு சாகச நிகழ்ச்சி, கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் நடைபெற்றது. ஆனால் சாகசம் செய்த காரில் இருந்து, ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களையும், காணொளியையும்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் ஒன்று, சாகசத்தில் ஈடுபடும் காட்சிகளை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. தண்ணீர் நிரம்பிய கரடு முரடான பாதையில், அந்த ஜிப்ஸி வேகமாக வருகிறது. ஜிப்ஸியின் பின் பகுதி இருக்கையில், எவ்விதமான பாதுகாப்பும் இல்லாமல், பயணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பிடிமானம் கூட சரியாக அமையவில்லை.

இந்த நிலையில், ஓரளவிற்கு நல்ல வேகத்தில் வந்து கொண்டிருந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி, கரடு முரடான பாதையில் திடீரென எகிறி குதிக்கிறது. அப்போது சரியான பிடிமானம் இல்லாமல், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். எனினும் அந்த நபர் கீழே விழுந்ததை ஜிப்ஸியின் ஓட்டுனர் கவனித்தது போல் தெரியவில்லை. அவர் தொடர்ந்து காரை ஓட்டினார்.

வெளியே தூக்கி வீசப்பட்ட நபர், காருக்கு மிக நெருக்கமாக விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி கொள்வதில் இருந்து அவர் நூலிழையில் தப்பித்தார். இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம். மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர், நல்ல வேளையாக உடனே எழுந்து வருவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.

பயணம் செய்யும்போது காரில் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். குறிப்பாக சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், மேற்கூரை இல்லாத கார்களில் அமர்ந்து பயணம் செய்வதும் ஆபத்தானது.

இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். இந்த சம்பவத்தில் வெளியே தூக்கி வீசப்பட்ட நபர் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மேற்கூரை இல்லாத காரில்தான் அமர்ந்திருந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆஃப் ரோடு பயணங்களின்போது எப்போது, என்ன நடக்கும்? என்பதை கணிக்கவே முடியாது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ளும்போது, ஆஃப் ரோடு நிபுணர்கள் உடன் இருப்பது நல்லது. வழியில் உள்ள தடைகள் பற்றி அவர்கள் எச்சரிக்கை செய்வார்கள் என்பதால், நீங்கள் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட முடியும். கூர்க்கில் நடந்த விபத்தின் காணொளி, சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications








