பொது வெளியில் போலீஸ் செய்த காரியம்... ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்துபவர்கள் நடுக்கம்...
ரோடு ரோலர் ஏற்றி ஆஃப்டர் மார்கெட் சைலென்சர்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் பகுதியில், இரு சக்கர வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தியிருந்த 51 ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் அவற்றின் மீது ரோடு ரோலரை ஏற்றி அழிக்கவும் செய்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை அனைவருக்கும் தெரியும் வகையில் காவல் துறை அதிகாரிகள் பொது வெளியில் வைத்து மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை கண்டறிவதற்காக காவல் துறை தரப்பில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 25,500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அதன் பிறகு சைலென்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோ Kannadigaworld.com என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைலென்சர்களை ரோடு ரோலர் எப்படி நசுக்கி அழிக்கிறது? என்பதை நம்மால் காண முடிகிறது. உடுப்பி மாவட்டம் முழுமைக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு முடிவு கட்டப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 முதல் 91 டெசிபல் வரையிலான ஒலி அளவை மட்டுமே மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்கள் 80 டெசிபல் ஒலியை எழுப்பலாம்.

அதே சமயம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 12 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட வர்த்தக வாகனங்கள் 91 டெசிபல் வரை ஒலியை உருவாக்கலாம். ஆனால் சிலர் சைலென்சர்களை மாடிஃபிகேஷன் செய்தோ அல்லது ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தியோ அனுமதிக்கப்பட்டதை விட அதிக ஒலியை எழுப்பும்படி செய்கின்றனர்.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபடுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை ராயல் என்பீல்டு பைக்கின் உரிமையாளர்கள் பலர் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து, உடுப்பி காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ஆனால் இதற்கு முன்பாகவும் பறிமுதல் செய்யப்பட்ட சைலென்சர்களை காவல் துறையினர் இப்படி ரோடு ரோலர் ஏற்றி அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் தொடர்ந்து பலர் இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர்.
இதுபோன்ற சைலென்சர்கள் எழுப்பும் சத்தம், முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்கு அருகில் கூட இப்படிப்பட்ட சைலென்சர்கள் மூலம் பலர் இரைச்சலை ஏற்படுத்தி வருவது தவறான விஷயம்.


Click it and Unblock the Notifications








