தொடரும் அவலம்! ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தாயின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்ற மகன்... எங்கு தெரியுமா?
தொடரும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நாட்டில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. அந்தவகையில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் மனதை உலுக்கும் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாட்டில் கொரோனா அதன் கோரமான முகத்தைக் காட்ட தொடங்கியுள்ளது. தற்போது நாட்டை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மும்மடங்கு எளிதில் பரவும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

உலக அளவில் கவலையளிக்கக் கூடிய தகவல் என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. படுக்கை வசதி குறைவு, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ தேவை அதிகரிப்பு ஆகிய பன்முக நெருக்கடியால் நாடே முடங்கும் நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால் தனது இறந்த தாயாரின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவல நிலை ஓர் மகனுக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலேயே இந்த மனதை உலுக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கர்நாடகாவின் மாண்ட்யா பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது தாயார் சாந்தம்மா. இவருக்கு மிக சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக மாண்ட்யாவில் இருந்து பெங்களூருவிற்கு சாந்தம்மா அழைத்து வரப்பட்டார்.

தற்போது பெங்களூருவின் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால், முதலில் சந்தம்மாவைக் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுருத்தப்பட்டது.

இதையடுத்து தனது தாயை காப்பாற்றுவதற்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சிவகுமார் அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தம்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினர். செய்வதறியாது திகைத்து நின்ற சிவகுமார், பிரேதத்தை தனது சொந்த எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாயிலாக எடுத்து செல்ல திட்டமிட்டார்.

ஆனால், ஒரு ஆம்புலன்ஸ்கூட அவருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால், தனது சொந்த ஊரான மாண்டயாவிற்கு ஆட்டோ வாயிலாக தாயின் உடலை எடுத்துச் செல்ல அவர் திட்டமிட்டார். அவ்வாறு உடலை எடுத்துச் செல்லும் வழியில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்களால் ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலத்தால் இறந்த தாயின் உடலை மகன் ஆட்டோவில் எடுத்து வந்த வேதனையளிக்கும் தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. இந்த சம்பவம் கர்நாடகா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பதிவுகள் அதிகரித்து வருவதால் அனைத்து ஆம்புலன்ஸ்களும் முழுமையாக நோய் தொற்றுள்ளவர்களைக் கையாளும் பணியில் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களின் பற்றாக்குறையும் தற்போது நாடு முழுவதும் தலைவிரித்தாட தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாகவே இதுமாதிரியான மனதை உலுக்கும் சம்பவங்கள் நாட்டில் தொடர் கதையாக ஆரம்பித்திருக்கின்றன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








