சினிமாவை போல் நிகழ்ந்த சம்பவம்... 370 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்... ஹீரோவாக மாறிய பொதுமக்கள்...
ஆம்புலன்ஸ் ஒன்று 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் கடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மனித உடல் உறுப்புகளையும், நோயாளிகளையும் அவரசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்காக, காவல் துறையினரும், பொதுமக்களும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் பலமுறை நடந்துள்ளது. இந்த வகையில், அவசர அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவரை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. சுஹானா என்ற 22 வயது பெண்ணுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எனவே கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள மஹாவீர் மருத்துவ மையத்தில் இருந்து, பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேஹி மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.

ஹனீப் என்ற ஓட்டுனர் ஆம்புலன்ஸை ஓட்டியுள்ளார். வெறும் 4 மணி நேரம் மற்றும் 5 நிமிடத்தில், அவர் இந்த ஒட்டுமொத்த தொலைவையும் கடந்துள்ளார். இந்த அவசர பயணம் குறித்து உள்ளூர் மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆம்புலன்ஸ் வேகமாக கடப்பதற்கு தேவையான உதவிகளை காவல் துறையினருடன் இணைந்து அவர்கள் செய்துள்ளனர்.

தன்னார்வலர்களும், சமூக சேவகர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் சரியாக எங்கே உள்ளது? என்பதை தெரிந்து கொண்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ் வரும் நேரத்தில், சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் ஆம்புலன்சுடன் ஒரு சில கார்கள் உடன் பயணம் செய்ததை காணொளியில் பார்க்க முடிகிறது. அந்த கார்கள் அபாயகரமான முறையில் இயக்கப்பட்டுள்ளன. அந்த கார்கள் நோயாளியின் உறவினர்களுடையதா? அல்லது பொதுமக்களுடையதா? என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த கார்கள் அபாயகரமான முறையில் இயக்கப்பட்டன.

வளைவுகளில் அந்த கார்கள் அதிவேகத்தில் திரும்பின. ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அனைத்து உயிர்களும் தனக்கு மிகவும் முக்கியம் என ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹனீப் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு குறுகிய நேரத்தில் செல்வதன் மூலம் நோயாளியின் உயிரை காப்பாற்றுவதே தன்னுடைய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆம்புலன்ஸ் விரைவாக கடப்பதற்காக பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சிகளை காவல் துறையினர் பாராட்டியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இப்படியான நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் பல முறை மக்கள் இப்படி ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அந்த காணொளிகள் சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ஆனால் சில சமயங்களில் ஒரு சில வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவது கிடையாது. அத்தகைய வாகன ஓட்டிகளை கண்டறிந்தால், அவர்களுக்கு காவல் துறையினர் கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றனர். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால வாகனங்களுக்கு உரிய முறையில் வழி விடுவது நம் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications








