டோல்கேட் கட்டணம் ரூ. 4 லட்சம்: மருத்துவருக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த ‘சுங்கச்சாவடி’ ஊழியர்!
நெடுஞ்சாலையில் காருக்கான சுங்கக்கட்டணமாக ஒருவரிடம் 4 லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் பல்வேறு குழப்பங்களும், பிரச்சனைகளும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் இங்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அனேகமாக இந்தியாவிலேயே காருக்கு 4 லட்ச ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் ராவ் என்பவர், இரண்டு தினங்களுக்கு முன் கொச்சி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் காரில் மும்பைக்கு பயணம் செய்திருக்கிறார். இரவு 10.30 மணியளவில் உடுப்பி அருகேயுள்ள ‘குண்ட்மி' டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக காரை நிறுத்தி டோல்கேட் ஊழியரிடம் தனது டெபிட் கார்டை கொடுத்துள்ளார்.

மருத்துவரின் கார்டை வாங்கிய சுங்கச்சாவடி உதவியாளர் காருக்கான கட்டண தொகையான 40 ரூபாய்க்கு ஸ்வைப் செய்துள்ளார். ஆனால் மருத்துவர் ராவிற்கு 4 லட்ச ரூபாய்க்கு ஸ்வைப் செய்த ஒப்புகை சீட்டை கொடுத்துள்ளார் அந்த ஊழியர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவருக்கு வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவலும் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராவ் இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் கேட்க அவர் தனது தவறை ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். சுங்க நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் பேசியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

பின்னர், வேறு வழியின்றி 5 கிமீ தொலைவில் இருக்கும் ‘கோடா' எனுமிடத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று ராவ் புகார் அளித்தார். ராவின் புகாரைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் தலைமைக்காவலர் ஒருவர் ராவுடன் வந்து சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் ராவின் 3,99,960 ரூபாய் பணத்தை காசோலையாக அளிக்க சுங்க நிர்வாகிகள் முன்வந்தனர். அதனை ஏற்க மறுத்த மருத்துவர் ராவ், தான் இழந்த முழு தொகையையும் ரொக்கமாக திருப்பித்தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஒருவழியாக 5 1/2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை 4 மணியளவில் ரூ.3,99,960 பணத்தை ரொக்கமாக அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல், சுங்கச்சாவடியில் மட்டுமல்ல வேறு எங்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் மிகவும் கண்கானிப்புடன் இருக்க வேண்டும் என்பது இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் பாடமாகும். அல்லது இவரைப் போல் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் நிம்மதி இழந்து வீண் அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம்.
புதிய 2017 ஹுண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கானலாம்:


Click it and Unblock the Notifications








