தன்னம்பிக்கை... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கன்னியாகுமரி-காஷ்மீர் பயணம்... பிரம்மிக்க வைத்த கர்நாடக யூ-டியூபர்!
கர்நாடகாவை சேர்ந்த யூ-டியூபர் ஒருவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எத்தனை பேர் K to K பயணங்களை செய்துள்ளனர்? அனேகமாக க்ரிஷ் ஷெட்டிற்கு (Girish Shet) முன்பு யாரும் K to K பயணங்களை செய்ததில்லை என்பதுதான் இந்த கேள்விக்கு பதில்.

க்ரிஷ் ஷெட் பிரபலமான யூ-டியூபர் ஆவார். அத்துடன் மோட்டார்சைக்கிள் ஆர்வலரும் கூட. அனேகமாக இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் K to K பயணத்தை மேற்கொண்ட முதல் நபர் இவராக இருக்கலாம். இவர் கர்நாடக மாநிலம் மங்களூர் நகரை சேர்ந்தவர் ஆவார். மோட்டார்சைக்கிள்களில் இவர் தொலைதூர பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது, மோட்டார்சைக்கிள்களை ரிவியூ-வும் செய்து விடுவார். 'Weekend on Wheels' என்ற பெயரில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, இவர் யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். ஆனால் கடந்த 2021ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், மாரடைப்பு காரணமாக அவரால் சில வாரங்களுக்கு வீடியோக்களை பதிவிட முடியவில்லை. இருப்பினும் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் மீண்டு வந்தார்.

பயணங்கள் மீது பேரார்வம் கொண்டவரான க்ரிஷ் ஷெட், சவாலான விஷயங்களை செய்வதையும் விரும்ப கூடியவர். எனவேதான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தொலைதூர பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இங்கே K to K என்பது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணிப்பதை குறிக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து கர்துங்-லா வரை க்ரிஷ் ஷெட் பயணம் செய்துள்ளார்.

இந்த தொலைதூர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணத்தில், வானிலைதான் அவருக்கு மிகவும் முக்கியமான சவாலாக இருந்தது. பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், க்ரிஷ் ஷெட் பயணம் செய்துள்ளார். இதில் பேட்டரிகளை மாற்றி கொள்ள கூடிய வசதி இருக்கிறது என்பது முக்கியமான சிறப்பம்சம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 'ரூபி' என்று செல்ல பெயரிட்டு விட்டு, அவர் கர்துங்-லாவிற்கு பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்திற்காக பவுன்ஸ் நிறுவனம் க்ரிஷ் ஷெட்டிற்கு 5 பேட்டரிகளை கூடுதலாக வழங்கியது. எனவே ஒட்டுமொத்தமாக 6 பேட்டரிகளுடன் க்ரிஷ் ஷெட் பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு பேட்டரியையும் ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பவர் மோடில் சுமார் 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

சூழ்நிலையை பொறுத்து க்ரிஷ் ஷெட் ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் க்ரிஷ் ஷெட்டும், ரூபியும் ஒட்டுமொத்தமாக 11 மாநிலங்களின் வழியாக 4,340 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த பயணம் முடிவடைவதற்கு 19 நாட்கள் ஆகியுள்ளது. 83 முறை பேட்டரிகள் மாற்றப்பட்டன.

இதுகுறித்து க்ரிஷ் ஷெட் கூறுகையில், ''நான் ஆஃப்-ரோடிங் செய்தேன். மலைகளில் ஏறினேன். மணல் சாலைகளில் ஓட்டினேன். ஆனாலும் இந்த ஸ்கூட்டரில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்றார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளன. ஒரு சிலருக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பிரச்னைகளை கடந்து வலுவான 'கம் பேக்' கொடுக்க வேண்டும். வாழ்க்கையில் எனக்கும் கடுமையான பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால் ரைடிங் மீதான ஆர்வம், இந்த சாதனையை படைப்பதற்கு, என்னை மீண்டும் வண்டியின் இருக்கையில் ஏற்றியது. மனதை உறுதி செய்து கொண்டு, உடலை பயிற்றுவித்தால், நீங்கள் எதையும் சாதிக்கலாம்'' என்றார்.

இந்த சாதனைக்காக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' இடம்பிடிக்க முடியும் என க்ரிஷ் ஷெட் நம்புகிறார். இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் க்ரிஷ் ஷெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரச்னைகளில் இருந்து மன உறுதியுடன் மீண்டு வந்து, சாதனை படைத்து கொண்டிருக்கும் க்ரிஷ் ஷெட்டிற்கு நமது பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications








