ஆற்றில் குப்பையை கொட்டிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்... என்ன தண்டனை குடுத்தாங்க தெரியுமா?
ஆற்றில் குப்பையை கொட்டிய பெண் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆறுகளில் குப்பைகளை கொட்டுவது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்ட விரோதமானது. ஆனால் பலர் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த சூழலில், கர்நாடக மாநிலம் மங்களூரில் பெண் ஒருவர் ஆற்றில் குப்பையை கொட்டினார். இதன் காரணமாக அவரது கார் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆற்றில் குப்பையை கொட்டும் வீடியோ வைரல் ஆனதால், அவர் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோவில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று, பாலத்தின் மீது நிற்பதை காண முடிகிறது. நேத்ராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நதி புனிதமாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஹூண்டாய் வெர்னா காரில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். அதில் ஒருவர் ஆற்றில் குப்பையை வீசினார். இதன்பின் அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காரில் புறப்பட்டு விட்டனர். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதன்பின் அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதன்பேரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோவில் காரின் பதிவு எண் மிகவும் தெளிவாக தெரிந்ததால், சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படவில்லை.

அந்த பெண்ணின் மீது மங்களூர் காவல் துறையினர் தற்போது வழக்கும் பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நதிகளில் இவ்வாறு குப்பைகளை கொட்டுவது தவறான விஷயமாகும். இதுதவிர தொழிற்சாலை கழிவுகளும் நதியில் கலக்கிறது.

இதன் மூலம் நதி அசுத்தமாகி, அதன் தண்ணீரை பருகுபவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நதிகளை அதிகளவில் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாகதான் பல்வேறு மாநில அரசுகள் நதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில் தற்போது உயரமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பதும் இந்த வேலிகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் மாற்று வழிகளை கண்டறிந்து பலர் ஆறுகளில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி கொண்டுதான் உள்ளனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி ஆறுகளில் குப்பைகளை கொட்டாதீர்கள். நீங்கள் நதியை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டால், உங்கள் மீதும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் இயற்கையை பாதுகாக்க முடியும்.


Click it and Unblock the Notifications