கேதார்நாத்தில் நடந்த திக், திக் நிமிடங்கள்!! கோயிலில் சாமி பார்க்க வந்தவர்களுக்கா இப்படியெல்லாம் நடக்கணும்?
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்களின் ஹெலிகாப்டர் தொழிற்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பைலட் துரிதமாகவும், விவேகமாகவும் செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நேபாளம் நாட்டை ஒட்டி இமயமலை தொடருக்கு கீழே அமைந்துள்ள நமது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் இயற்கை அழகை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அற்புதமான, செழிப்பான இடங்களை கொண்டுள்ள உத்தரகாண்டில் புனித ஸ்தலங்களும் ஏராளமானவை உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், கேதார்நாத்.

உத்தரகாண்டின் ருத்திரபிரயாகை மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3.5 கிமீ உயரத்தில் உள்ள நகரமான கேதார்நாத்தில் புகழ்பெற்ற சோதிலிங்கம் கோயில் அமைந்துள்ளது. மிக பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு எப்போதும் யாத்ரீகர்களும், பக்தர்களும் வந்து செல்வது வழக்கம். சிலர், வாகனங்களில் சாலை வழியாக வருவர். ஒரு சிலர், உயரத்தை கருத்தில் கொண்டு ஹெலிகாப்டர்களில் செல்வதும் உண்டு.
இதற்காக, கோயிலுக்கு அருகேயே ஹெலிபேட் வசதி உள்ளது. இந்த வகையில், 6 யாத்ரீகர்கள் கேதார்நாத் கோயிலுக்கு சமீபத்தில் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். வழக்கம்போல் ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க பைலட் கல்பேஷ் தயாராகி கொண்டிருந்தார். ஹெலிபேட் வெறும் 100மீ தொலைவில் இருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

ஹெலிகாப்டரின் பின்பக்க மோட்டாரில் பிரச்சனை ஏற்பட்டதை பைலட் கண்டறிந்தார். இதனால், அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஹெலிகாப்டரை மலைப்பிரதேச பகுதிகளில் விரும்பிய இடத்தில் தரையிறக்குவது நாம் நினைப்பது போல் அவ்வளவு ஒன்றும் சுலபமானது கிடையாது. அதுமட்டுமின்றி, பின்பக்க மோட்டாரில் பிரச்சனையும் இருந்ததால் கீழே இறக்க, இறக்க ஹெலிகாப்டர் தாறுமாறாக சுழல ஆரம்பித்தது.
ஹெலிபேடுக்கு அருகே இருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோவில், ஹெலிகாப்டர் ஒரே இடத்தில் கட்டுப்பாடின்றி சுழல்வதை காணலாம். அந்த சமயத்தில் ஹெலிகாப்டரை கண்ட்ரோல் செய்வது மிகவும் சிரமமானது. ஆனால், பைலட் தனது முழு அனுபவத்தையும் பயன்படுத்தி, ஹெலிகாப்டரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பத்திரமாக தரையிறக்கி உள்ளார்.

ஹெலிபேடுக்கு 100 மீட்டருக்கு முன்னரே புல் தரையில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட இடத்தை வீடியோவில் காணலாம். மலைப்பிரதேச பகுதி என்பதால், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட இடம் கொஞ்சம் சாய்வாக உள்ளதை பார்க்க முடிகிறது. அதாவது, அத்தகைய சரிவான இடத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டரை தரையிறக்குவது முடியாத காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், இதனை இந்த ஹெலிகாப்டரின் பைலட் நிஜமாக்கி காட்டியுள்ளார். பைலட் உள்பட ஹெலிகாப்டருக்கு உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மோட்டார் பழுதடைந்ததால், ஹெலிகாப்டரின் பின்பகுதி மட்டும் சற்று சேதமடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ஹெலிகாப்டரின் தடுமாற்றத்தை பார்த்தாலே பைலட் எந்த அளவிற்கு திறமை உடன் செயல்பட்டுள்ளார் என்பது புரியும். ஹெலிபேடுக்கு அருகே இருந்த பணியாளர்கள், எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்து அங்கிருந்து ஓட துவங்குவதையும் வீடியோவில் காண முடிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.


Click it and Unblock the Notifications









