காலத்துக்கும் மறக்க முடியாத பரிசு... ஊழியர்கள் சந்தோஷத்துல திக்கு முக்காடி போயிட்டாங்க! இப்படி ஒரு கம்பெனியா!
காலத்திற்கும் மறக்க முடியாத பரிசை, ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக புகார்கள் இருந்து வருகின்றன. அத்தகைய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே ஊழியர்கள் பலரும் விருப்பமே இல்லாமல் வேலை செய்யும் சூழல்தான் காணப்படுகிறது.

நீங்கள் பணியாற்றி வரும் நிறுவனமும் இப்படிப்பட்டது என்றால், இந்த செய்தி உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். ஆம், ஐடி நிறுவனம் ஒன்று தற்போது தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. ஊழியர்களின் உழைப்பை பாராட்டும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவை சேர்ந்த ஜாபின் அண்டு ஜிஸ்மி ஐடி சர்வீசஸ் என்ற நிறுவனம்தான் தற்போது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசளித்துள்ளது. இந்த நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது ஆகும். இந்த நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து திறமையாக பணியாற்றி வரும் 6 ஊழியர்களுக்கு கார்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.

இந்த 6 பேருக்கும் பரிசாக வழங்கப்பட்டிருப்பது, கியா செல்டோஸ் கார்கள் ஆகும். ஜாபின் அண்டு ஜிஸ்மி ஐடி சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான ஜாபின் ஜோஸ் மற்றும் ஜிஸ்மி மூலம் 6 ஊழியர்களுக்கும் கியா செல்டோஸ் கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்த 6 ஊழியர்களின் வேலையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து இந்த 6 பேரும் திறமையாக உழைத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜாபின் அண்டு ஜிஸ்மி ஐடி சர்வீசஸ் நிறுவனம் வெறும் 2 ஊழியர்களுடன் மட்டும்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

ஜாபின் அண்டு ஜிஸ்மி ஐடி சர்வீசஸ் நிறுவனத்தின் 6 ஊழியர்களுக்கு தற்போது பரிசாக வழங்கப்பட்டுள்ள கியா செல்டோஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார் ஆகும். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது.

கியா செல்டோஸ் காரில், 115 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 115 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என கியா செல்டோஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் கியா செல்டோஸ் கார் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலை 10.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்டின் விலை 18.65 லட்ச ரூபாயாக உள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

6 பேருக்கு கியா செல்டோஸ் கார்கள் தவிர, கடந்த ஆண்டில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கையும் இந்த நிறுவனம் தற்போது பரிசாக வழங்கியுள்ளது. இந்த பரிசுகளின் மொத்த மதிப்பு சுமார் 1.20 கோடி ரூபாய் ஆகும். ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது செல்டோஸ் காரின் எந்த வேரியண்ட்? என்பதை இந்த நிறுவனம் வெளியிடவில்லை.

ஆனால் மதிப்பை வைத்து பார்க்கையில், அவை டாப் வேரியண்ட்களாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. செல்டோஸ்தான், இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் ஆகும். தற்போது சொனெட், கார்னிவல், கேரன்ஸ் மற்றும் இவி6 என கியா நிறுவனம் இந்தியாவில் 5 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.

மறுபக்கம் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கும் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகதான் உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் இந்த பைக், 2.02 லட்ச ரூபாய் முதல் 2.19 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications