கேரளாவை கலக்கும் புதுமை பெண்கள்... இந்தியாவின் முன்னணி தொழிலதிபரே அசந்து போய்ட்டாரு... ஏன் தெரியுமா?
கேரளாவை கலக்கி வரும் புதுமை பெண்களால், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அசந்து போயுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவும் குறைவுதான். இது இரண்டாவது ப்ளஸ் பாயிண்ட்.

இதுபோன்று பல்வேறு நன்மைகள் இருப்பதால், இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கொரோனா பிரச்னையால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா பிரச்னை முடிவடைந்த பிறகு, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கச்சா எண்ணெய்யை அதிகம் நுகரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நிச்சயமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அருமையான தீர்வு. உலகில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக நமது இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகதான் பூர்த்தி செய்யப்படுகிறது.

இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க கூடிய விஷயம் என்பதால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் தற்போது கார், டூவீலர், ஆட்டோ என பல்வேறு வகையான வாகனங்களிலும் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாக தொடங்கியுள்ளன.

குறிப்பாக எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. மின்சார ஆட்டோக்களை பயணிகளின் சவாரிக்கு பலர் பயன்படுத்தி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த புதுமை பெண்கள் சிலர் அதனை உணவகமாக மாற்றி அசத்தியுள்ளனர். பொதுவாக வாகனங்களின் மூலம் உணவு விற்கும் நடைமுறை இந்தியாவில் நீண்ட காலமாகவே இருந்து கொண்டுதான் உள்ளது.

ஆனால் அப்படிப்பட்ட அனைத்து உணவகங்களுக்கும், இந்த ஆட்டோ உணவகங்கள் கடுமையான சவாலை வழங்கி வருகின்றன. அம்மா ருச்சி என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்கள், ஃபுட் ரிக்ஸாக்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆட்டோ ரிக்ஸாக்களுடன் கிச்சன் இணைக்கப்பட்டுள்ளது. இவை சோலார் பவருடன் கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்கள் ஆகும்.

இதன் மூலம் அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவையாக திகழ்கின்றன. கேரளா மாநிலத்தில் இந்த புதிய முயற்சி ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆட்டோ உணவகங்கள் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம். பிரியா பாபு என்பவர் தலைமையில்தான் அம்மா ருச்சி ஆட்டோ உணவகங்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 9 பெண்களும் அவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆட்டோ ரிக்ஸாவை ஓட்டி சென்று உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் பிரபலமாக உள்ள பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அம்மா ருச்சி ஆட்டோ உணவகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''உணவு வகைகள் அனைத்தும் சுகாதாரமாக தயார் செய்யப்படுகின்றன.

நாங்கள் தயாரிக்கும் உணவை சாப்பிடுவதற்காக சிலர் தொலைவில் இருந்து கூட வருகின்றனர். எங்களது குழந்தைகளும் கூட இதே உணவைதான் உண்கின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் எங்கள் உணவின் தரத்தை நம்புகின்றனர்'' என்றார். இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ குறித்து அவர் கூறுகையில், இந்த ஆட்டோ சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இது புகையை உமிழாது என்பதுடன், இரைச்சலையும் ஏற்படுத்தாது. இது எலெக்ட்ரிக் வாகனம் என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இந்த மின்சார ஆட்டோவிற்கு, எங்கள் வீடுகளிலேயே சார்ஜ் நிரப்பி கொள்ள முடியும். சோலார் பவர் மூலமாக இந்த ஆட்டோவில் விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன'' என்றார். தற்போது இந்த பெண்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தற்போது இந்த பெண்கள் பற்றிய வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்-ஆக இருக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களையும், இந்தியர்களின் சிறு சிறு கண்டுபிடிப்புகளையும் தொடர்ச்சியாக அவர் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இந்த வகையில் அம்மா ருச்சி ஆட்டோ உணவகம் பற்றிய வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று (மே 23ம் தேதி) பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தி இந்து வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த முயற்சி தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தற்போது இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








