உயிர் பிழைச்சவங்க காருக்கு கோவில் கட்டி கும்பிடனும்! கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்தது!
ஃபோர்டு மோட்டார் (Ford Motor), பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். நல்ல தரமான மற்றும் வலிமையான கார்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக ஃபோர்டு விளங்கினாலும், இந்தியாவில் தற்போது ஃபோர்டு கார்கள் விற்பனையில் இல்லை. மஸ்டங் (Mustang) என்கிற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மட்டுமே பணக்காரர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றப்படி, மற்ற விலை குறைவான ஃபோர்டு கார்களின் விற்பனை சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது. நம் நாட்டில் ஃபோர்டு கார்கள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததால் வேறு வழியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை ஃபோர்டு கையில் எடுத்தது.
இந்த முடிவால், இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ecosport) என்கிற அருமையான கார் இந்திய மார்க்கெட்டை விட்டு சென்றது. ஈக்கோஸ்போர்ட் காரை தவிர்த்து, வேறெந்த காருக்கும் வரவேற்பு கிடைக்காததினால் தான் ஃபோர்டு இந்தியாவை விட்டு நடையை கட்டியது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் எந்த அளவிற்கு அருமையான கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக கேரளாவில் விபத்து ஒன்றில் இருந்து பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்தில் ஈக்கோஸ்போர்ட் காரினுள் பயணித்த பயணிகள் அனைவரும் எந்த காயமும் இன்றி பத்திரமாக உயிர்பிழைத்து உள்ளனர். கேரளாவின் திரிச்சூரில் செட்டுவா என்கிற பகுதியில் இந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் விபத்து நடந்துள்ளது.
குருவாயூர் பகுதியில் இருந்து த்ரிதல்லூர் என்கிற பகுதிக்கு சிலர் தங்களது ஈக்கோஸ்போர்ட் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். திரிச்சூரில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், சாலையெங்கும் ஈரமாகவும், வழுக்கிவிட கூடியதாகவும் இருந்துள்ளது. போதாக்குறைக்கு, சம்பவத்தின்போது இந்த ஈக்கோஸ்போர்ட் கார் சென்ற சாலைக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66-க்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
இதனால், இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகே மண் கொட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்கான கனரக வாகனங்கள் நின்றுக் கொண்டிருப்பதை இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். மேலும், நெடுஞ்சாலை பணிகளால் ஆங்காங்கே பாதைகள் திருப்பிவிடப்பட்டு இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஈக்கோஸ்போர்ட் காரை ஓட்டி சென்ற டிரைவர், ஒரு கட்டத்தில் கண்ட்ரோலை இழந்து சாலையின் மத்தியில் இருந்த டிவைடரில் காரை கொண்டுப்போய் மோதி உள்ளார்.
சரியாக, காரின் முன்பக்கத்தின் மத்தியில் டிவைடர் மோதி உள்ளது. விபத்தின்போது காருக்கும், காரினுள் இருந்தவர்களுக்கும் பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்ததற்கு, இவ்வாறு காரின் முன்பகுதியின் மத்தியில் டிவைடரில் மோதியது முக்கியமான காரணம். ஏனென்றால், கொஞ்சம் அந்த பக்கமோ அல்லது இந்த பக்கமோ தள்ளி மோதி இருந்தால், ரிவர்ஸில் கார் அதன் எதிர்திசையில் வேகமாக தள்ளப்பட்டு இருக்கும்.
அவ்வாறு தள்ளப்படும் இடத்தில் வேறு எதாவது வாகனம் இருந்திருந்தாலோ அல்லது வேறு எதாவது டிவைடர் அல்லது கம்பம் இருந்திருந்தாலோ அதன்மீது மோதி கார் இன்னும் பலத்த சேதாரங்களை சந்தித்திருக்க கூடும். இதன் விளைவாக, காருக்குள் இருந்த பயணிகளும் பலத்த காயமடைந்து இருக்கக் கூடும். ஆனால், நல்லவேளையாக காரை சரியாக டிவைடரின் மத்தியில் மோதி நிறுத்தியதால், மோதலுக்கு பின் கார் புரள்வது, பெல்டி அடிப்பது எல்லாம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்த ஈக்கோஸ்போர்ட் காரின் முன்பகுதி பலத்த சேதாரங்களை சந்தித்துள்ளது. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், காரின் முன்பகுதி மட்டுமே சேதமடைந்து இருப்பது ஆகும். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.01 லட்சத்தில் இருந்து இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்துக்கு டிரைவரை காரணமாக சொல்லும் அதேநேரம் அரசாங்கத்தையும், தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்தையும் குறை சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், இந்த விபத்து நடந்த பகுதியில் முறையான எச்சரிக்கை குறியீடுகள் எதுவும் இல்லை என அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். நல்லவேளையாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் தரமான உடலமைப்பினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications










