என்ன ஆனாலும் சரி... மத்திய அரசிடம் இதை விட்டு கொடுக்க மாட்டோம்!! கேரள அரசுக்கு ரொம்ப தைரியம் தான்!
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு சவுகரியம் அளிக்கக்கூடிய வகையிலான திட்டங்களையும், செயல்முறைகளையும் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது. டிஜிட்டல் தொழிற்நுட்பங்களை மக்கள் சேவைக்காக முடிந்த வரையில் அதிகமாக பயன்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. நாடு முழுவதும் ஒரே தேர்தல், பாரத் வாகன பதிவு உள்ளிட்டவற்றை தொழிற்நுட்பங்களையும், இண்டர்நெட் வளர்ச்சியையும் நம்பியே மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கிறது.
ஆனால், இத்தகைய திட்டங்களினால் மாநில அரசின் உரிமைகள் மறுக்கப்படுவதாக சில மாநில அரசாங்கங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நம் தமிழ்நாடு உள்பட நிறைய மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு உள்ளது. அதேபோல், மத்திய அரசின் பாரத் வாகன பதிவுக்கும் சில மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. அத்தகைய மாநிலங்களில் ஒன்று, கேரளா ஆகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை போல, பாரத் வாகன பதிவு திட்டமும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகன பதிவெண்ணை கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலமாக, வாகனத்தை பதிவு செய்வதில் உள்ள சில அசவுகரியத்தை தவிர்க்க முடியும் மற்றும் நாட்டின் எந்தவொரு மூலையில் உள்ள வாகன உரிமையாளரையும் அடையாளம் காண முடியும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
ஆனால், தங்களது மாநிலத்தில் பாரத் வாகன பதிவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என கேரள மாநில அரசு உறுதியாக உள்ளது. இதற்கு கேரள அரசு கூறும் முக்கிய காரணம், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், வருடத்திற்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்படும் என்பதாகும். மத்திய அரசுக்கு இதுதொடர்பாக கேரள அரசு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், சாலை வரிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திடம் தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வாகன பதிவுக்கான ஒட்டுமொத்த வரி விகதத்தை குறைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு முன் வைத்த கோரிக்கையையும் கேரள அரசு நிராகரித்து உள்ளது. இதன் மூலமாக, மாநில அரசாங்க விஷயங்களில் மத்திய அரசு தலையிட வேண்டாம் என்பதை கேரள அரசு மறைமுகமாக கூறுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாரத் வாகன பதிவின்படி, வாகன ஒட்டிகள் தங்களது வாகனத்தின் மொத்த விலையில் (ஜிஎஸ்டி தவிர்த்து) 12% வரியை சாலை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இது அடுத்த 2 வருடங்களுக்கான சாலை வரி ஆகும். ஆனால், கேரள மாநில அரசோ சுமார் 21% வரையில் சாலை வரியாக வசூலிக்கிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்பட்ட பின் கிடைக்கும் வாகனத்தின் விலையில் 21% வரையிலான சாலை வரி கேரளாவில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி-ஐ சேர்த்தால், வாகனத்தின் மொத்த விலை இன்னும் அதிகமாக இருக்கும். அதில் 21% என்றால், சாலை வரி இன்னும் அதிகமாக வரும். சாலை வரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சதவீதத்தில் வசூலிக்கப்படுகின்றன. இதனை ஒழுங்குப்படுத்தும் முயற்சியாகவே பாரத் வாகன பதிவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
அத்துடன், பாரத் வாகன பதிவு முறையால் இன்னொரு நன்மையும் உள்ளது. அதாவது, தற்சமயம் சாலை வரி ஆனது வாகனத்தை பொறுத்து வசூலிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் மாதத்திற்கு மாதம் அல்லது வருடத்திற்கு வருடம் கூட சாலை வரியை செலுத்தலாம். ஆனால், 2-வீலர்களுக்கு 15 வருடத்திற்கான சாலை வரி ஆரம்பத்திலேயே வசூலிக்கப்படுகிறது. பாரத் வாகன பதிவு முறையில் 2 வருடங்களுக்கான சாலை வரி மட்டுமே வசூலிக்கப்படும். அதன்பின், மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2 வருடங்களுக்கான சாலை வரியை மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் போதும் என பாரத் வாகன பதிவு முறையில் இருப்பது ஒருபக்கம் நன்மை என சொன்னாலும், மறுப்பக்கம் இது வாகன உரிமையாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு, பாரத் வாகன பதிவில் சில குறைப்பாடுகளும் உள்ளன. கேரளா போன்ற மாநில அரசாங்கங்கள் பாரத் வாகன பதிவு முறையை நிராகரிப்பதற்கு இதையும் ஒரு காரணமாக சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









