கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு தாராளம்... ஏன் தெரியுமா?
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு தாராளம் காட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே செலவுகளை குறைப்பதற்கான முயற்சிகளை அரசுகள் எடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கு கேரள மாநில அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் கேரளா சிக்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கு, சுமார் 67 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது. இது மிகவும் அதிகமான தொகை என்பதால், கேரள அரசின் முடிவு அம்மாநிலத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

இத்தனைக்கும் நடப்பாண்டு இறுதி வரை வாகனங்களை வாங்குவதற்கு தடை உள்ளது. இருந்தாலும் கேரள அரசு அதனை பொருட்படுத்தாமல், புதிய வாகனங்களை வாங்குவதற்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி 2 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 4 மஹிந்திரா பொலிரோ கார்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் 10 ஹோண்டா ஷைன் பைக்குகளை வாங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையின் 18 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாவும், இதன் காரணமாக விசாரணை பாதிக்கப்படுவதாகவும், அந்த துறையின் இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில்தான் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், என்னென்ன சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி விரிவான உத்தரவு ஒன்றை நிதித்துறை வெளியிட்டிருந்தது. ''அரசு கட்டிடங்களை அலங்கரித்தல், ஃபர்னிச்சர், வாகனங்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு அடுத்த ஓராண்டுக்கு அனுமதி வழங்கப்படாது'' என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் சில சமயங்களில் இந்த உத்தரவு மீறப்படுகிறது. குறிப்பாக வாகனங்களை வாங்கும் விஷயத்தில் இந்த உத்தரவு அவ்வப்போது மீறப்படுகிறது. இதற்கு முன்பாக நடப்பாண்டு மார்ச் மாதம் கூட காவல் துறைக்கு 293 வாகனங்களை வாங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''சாதாரண கார்கள் மற்றும் பைக் ஆகியவை வழக்கமாக விசாரணையின்போது அதிகாரிகளால் பயன்படுத்தப்படுபவைதான். ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உயர் அதிகாரிகள் மிகவும் சௌகரியமாக பயணிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, 2 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை வாங்குவதற்காக மட்டும் செலவிடப்படவுள்ளது'' என்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications