கேரளாவில் ஒரே நாளில் ஹீரோவாகிய இளைஞர்கள்... பழைய மஹிந்திரா கார் போகாத இடமே இல்ல!!
வயநாடு நிலச்சரிவு, கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் சம்பவம். அதேபோல், கேரளாவின் நிறைய மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. அத்தகைய பகுதிகளில் இருந்து மக்களை மீட்க இராணுவத்தில் இருந்து உள்ளூர் தன்னார்வலர்கள் வரையில் போராடி வருகின்றனர். இதற்காக பலர் பல்வேறு விதமான வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மாடிஃபை செய்யப்பட்ட மஹிந்திரா பொலேரோ கார் ஒன்றின் மூலமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய ஆழமான பகுதிகளுக்கு பொலேரோ காரை இயக்கி சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுள்ளனர்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் ஒவ்வொரு வருடமும் கனமழை வெளுத்து வாங்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. அந்த வகையில், கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இது, அங்கு எல்லா வருடங்களிலும் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகளே என நாம் எளிதாக கடந்துச் செல்ல முடியாத அளவிற்கு ஒரு மோசமான சம்பவமாக கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை பலிவாங்கியுள்ள இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட கூற முடியாத அளவிற்கு கேரளாவில் நிறைய மாவட்டங்களில் மக்கள் கனமழையினால் பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அவ்வாறு மழைநீரால் இயல்பு வாழ்க்கையை இழந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்காக இளைஞர்கள் சிலர் மஹிந்திரா பொலேரோ காரை பயன்படுத்தி வருகின்றனர். மீட்கப்படும் மக்களை காரின் பொனெட் மற்றும் மேற்கூரையில் அமர வைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு இளைஞர்கள் அழைத்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு சில கார்கள் முட்டி அளவுக்கு நீர் தேங்கிய பகுதியில் சென்றாலே ஆஃப் ஆகிவிடும். ஆனால், மக்களால் வெளியே வர முடியாத அளவிற்கு இடுப்பளவு நீர் தேங்கிய பகுதிகளுக்கும் இந்த கருப்பு நிற பொலேரோ கார் அசால்ட்டாக சென்று மக்களை மீட்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த பொலேரோ கார் ஆனது 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டதாகும்.
4x4 டிரைவ் சிஸ்டம் ஆனது காரின் 4 சக்கரங்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான திசைகளில் இயங்குவதற்கு உதவுகிறது. இதன் மூலமாக, அத்தகைய கார்களை கரடு முரடான பாதைகளுக்கும், சகதி மிகுந்த பகுதிகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லலாம். அதுமட்டுமின்றி, 4X4 டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் ஆழமான நீரிலும் இயங்கக்கூடியவைகளாக விளங்குகின்றன. அத்தகைய கார்களுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு, மஹிந்திரா பொலேரோ ஆகும்.
இந்த செய்தியில் நாம் பார்க்கும் இந்த குறிப்பிட்ட கருப்பு நிற பொலேரோ ஆனது முதல்-தலைமுறை மாடல் ஆகும். மேலும், இது ஒரு மாடிஃபை செய்யப்பட்ட பொலேரோ கார் ஆகும். இந்த காரில் ஸ்னோர்கெல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் இடுப்பளவிற்கு நீர் உள்ள பகுதிகளிலும் கூட இந்த வாகனத்தால் எளிதாக செல்ல முடிகிறது. மேலும், ஏற்றம் இறக்கமான பகுதிகளுக்கும் இந்த வாகனத்தால் செல்ல முடிகிறது. குறிப்பாக, ஒரு வீட்டின் வாசல் அருகே வரையில் இந்த பொலேரோ காரில் சென்று மக்களை மீட்டுள்ளனர்.
இடுப்பளவு நீர் தேங்கிய பகுதிக்கு சென்றால், எப்படியிருந்தாலும் காருக்குள் நீர் புகுந்துவிடும். ஆனால், இது பழைய பொலேரோ கார் என்பதால், அதிகளவில் எலக்ட்ரானிக் பாகங்கள் இருக்காது என்பதால் கார் ஓனருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது, கிட்டத்தட்ட ஒரு மினி லாரி போன்று இந்த மஹிந்திரா பொலேரோ செயல்படுகிறது. இந்த பொலேரோ குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹிந்திரா ஜீப் 4x4 வாகனத்தில் மக்கள் மீட்கப்படுவதையும் காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, இந்த சம்பவங்களில் இருந்து இத்தகைய சவாலான பயணங்களை மேற்கொள்வதற்கு மஹிந்திரா வாகனங்கள் சரியானவை என்பதை அறிய முடிகிறது. முக்கியமாக, மலைப்பிரதேச மாநிலமான கேரள மக்களுக்கு ஏற்ற வாகனங்கள் மஹிந்திரா பொலேரோ மற்றும் ஜீப் ஆகும். கேரளாவின் தற்போதைய சூழலை பார்க்கும்போது, 2018 திரைப்படம் போல் நடந்துவிட கூடாது என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications








